
கத்தாரின் ‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில் காலமானார் என்று அந்நாட்டின் ‘அமிரி திவான்’ (அரச அவை) தெரிவித்துள்ளது.
அமிரி திவான் ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “இறைவனின் கட்டளை மற்றும் விதியின் மீது மாசற்ற நம்பிக்கை கொண்ட இதயங்களுடன், இன்று காலை காலமான மறைந்த – ‘இறைவன் அவர் மீது கருணை பொழிவானாக’ – அவரது மேதகு ‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் பேரிழப்பை எண்ணி இந்த தேசத்துடன் இணைந்து அமிரி திவான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.”
1995ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை கத்தாரை ஆட்சி செய்த ஷேக் ஹமத், எரிசக்தி வளம் மிக்க அந்நாட்டின் வியத்தகு வளர்ச்சியின் முதன்மைச் சிற்பியாகத் திகழ்ந்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில், கத்தார் நாடு அடைந்த பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியானது, சர்வதேச சமூகத்தில் அதன் அந்தஸ்தை மேலும் வலுப்படுத்தியது.
கத்தாரின் அரசியல் செல்வாக்கு இன்று வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா வரை பரந்து விரிந்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாகப் பார்க்கப்படும் கால்பந்துத் தொடர் எது? அத்தகைய பெருமைமிக்க ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கடந்த 2022ஆம் ஆண்டில் கத்தார் நடத்தியது; இதன் தொடக்கப் போட்டியில் கலந்துகொண்ட ரசிகர்களிடமிருந்து ஷேக் ஹமத் பேராரவாரத்துடனான கைதட்டல்களைப் பெற்றார்!
இவரது பதவிக்காலத்தில்தான் கத்தாரின் முதலாவது நிரந்தர அரசியலமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது; அத்துடன், பெண்கள் வாக்களிப்பதற்கும் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கும் உரிமை வழங்கப்பட்ட நகராட்சித் தேர்தல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்னர், 2013ஆம் ஆண்டில் அவர் தனது பதவியைத் துறந்து, அப்போதைய 33 வயதான தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார்.

