தென்னந்தோப்பு வச்சிருக்கீங்களா? கூடுதலாக ஏக்கருக்கு ரூ.60,000 சம்பாதிக்க அசத்தலான ஐடியா!
ஒரு பயிரை மட்டும் நம்பி விவசாயம் செய்வது சில நேரங்களில் லாபத்தை அதிகரிக்கும். ஆனால் சில நேரங்களில் அதுவே பிரச்சனையாய் மாறிடும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொள்ளலாம். மழைக்காலம் வந்துவிட்டால் பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு கொலை நடுங்கும். இதனால் தான் ஊடுபயிர் சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் ஒரு பயிர் நஷ்டத்தை கொடுத்தாலும் மற்றொன்று காப்பாற்றும்.
ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு பயிரோடு சேர்த்து மற்றொரு பயிரையும் விளைவிப்பதாகும். அதாவது ஒரே இடத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக வளர்க்கும் முறை. இதில் முதன்மை பயிர் இருக்கும். ஆங்காங்கே மீதமிருக்கும் இடங்களில் மற்றொரு பயிரையும் சேர்த்து விளைவிக்கலாம்.
தற்போதைய சூழலுக்கு ஊடுபயிர் சாகுபடி லாபகரமானதாக மாறி வருகிறது. அதுவும் தென்னந்தோப்பு, பாக்கு மரம் மற்றும் ரப்பர் தோட்டங்கள் வைத்திருந்தால் கோகோவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னையுடன் சேர்த்து கூடுதல் வருமானத்தைப் பெற விரும்பும் விவசாயிகளுக்கு இது உதவிகரமானதாக இருக்கும்.

சில வகை பயிர்களுக்கு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி அதிக அளவில் தேவைப்படாது. அப்படிப்பட்ட ஒரு பயிர் தான் இந்த கோகோ. தென்னந்தோப்பில் ஆங்காங்கே நிழலும் இருக்கும். இடையில் வெயிலும் தென்படும். இப்படி இருக்கும் இடம் கோகோ வளர ஏற்ற இடம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் 800 முதல் 1000 மில்லி மீட்டர் மழை பதிவாகும் பகுதிகளில் கோகோ சிறப்பாக வளரும்.
கோகோ பயிருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு. தண்ணீர் வசதி இருந்தாலும் சரி.. தண்ணீர் வசதி இல்லை என்றாலும் சரி சிறப்பாக வளரும். மேலும் செம்மண், வண்டல் மண் ஆகியவை இதற்கு உகந்தது. இது ஒரு சீசனல் பயிராகும். ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் கோகோவை நடவு செய்யலாம்.
தென்னந்தோப்பு அல்லது ரப்பர் தோட்டம் வைத்திருப்பவர்கள் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 450 முதல் 500 செடிகள் வரை தாராளமாக நடலாம். அதேபோல பாக்கு தோட்டம் வைத்திருந்தால் 500 முதல் 600 செடிகள் வரை நடலாம். அதிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும். பின்னர் விளைச்சல் வரத் தொடங்கும்.
இப்படி செய்யும் பட்சத்தில் ஏக்கருக்கு ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை தோராயமாககூடுதல் வருமானம் பெற முடியும். மேலும் தென்னந்தோப்பு மற்றும் பாக்கு மரத்திற்கு நாம் போடும் உரம் மற்றும் நீரே இந்த ஊடுபயிருக்கும் சென்று விடும். இதனால் பெரிதாக பராமரிப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் கோகோ மரத்திலிருந்து உதிரும் இலைகள் மண்ணின் வளத்தை அதிகரிக்கும்.
கோகோவின் ஓட்டையும் தீவனமாக மாற்றி வருமானம் பார்க்கலாம். கோகோவின் பயன்பாட்டை பற்றி சொல்லத் தேவையில்லை. சாக்லேட், கேக், பிஸ்கட் என அனைத்திற்கும் இதுவே மூலப்பொருள். மேலும் சந்தையில் சாக்லேட்டுக்கான தேவை எப்போதும் இருக்கும். தென்னை மரத்தோடு சேர்த்து உங்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமானால் இந்த முறை உதவிகரமானதாக இருக்கும்.

