அமெரிக்க அரசின் விசாரணை வளையத்தில் Cognizant..!! இந்திய ஐடி நிறுவனங்களுக்கு புது சிக்கல்..!!
அமெரிக்காவில் H1B போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த விசாக்களில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இது குறித்து தனது முதல் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது. அமெரிக்க அரசின் இந்த விசாரணை வளையத்தி இந்திய ஐடி நிறுவனமான காக்னிசண்ட் (Cognizant) பெயரும் இடம்பெற்றுள்ளது, ஐடி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்1பி விசா முறைகேடுகள் என்பது வெறும் குடியேற்ற விதிமீறல் மட்டுமல்ல, அவை திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடையதாக மாறியுள்ளது என அமெரிக்க அரசு தெரிவிக்கிறது. குறிப்பாக, வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வர செய்யப்படும் முறைகேடுகள், மனித கடத்தல் மற்றும் சர்வதேச குற்ற கும்பல்களுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.

அமெரிக்க குடியேற்ற துறை இதற்காக ஏராளமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. விசா மோசடி தொடர்பான தகவல்களை தெரிவித்தவர்கள் காக்னிசண்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்களை கூட குறிப்பிட்டு புகார் அளித்துள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிறுவனங்கள் ஹெச்1பி விசாக்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளனவாம். இருப்பினும், காக்னிசண்ட் நிறுவனம் மீது இதுவரை எந்த அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை; விசாரணை மட்டுமே தொடங்கியுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தகுதியான அமெரிக்க ஊழியர்களை புறந்தள்ளிவிட்டு, குறைவான ஊதியத்திற்கு வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை கொண்டு வந்து, சந்தையை நிரப்பும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசரணை தொடங்கியுள்ளது. போலியான ஆவணங்கள், தகுதியற்றவர்களை பணிக்கு அமர்த்துதல் மற்றும் ஊதியத்தை திருப்பி பெறும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டறிவதே இந்த விசாரணையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான ‘மோசடிகளை ஒழிக்கும் பணிக்குழு’ இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருகிறது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதும், முறைகேடான பாதையில் லாபம் ஈட்டும் நிறுவனங்களை தடுப்பதும் இந்த நடவடிக்கையின் முதன்மை இலக்கு.
அமெரிக்காவில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். 2024 நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட ஹெச்1பி விசாக்களில் சுமார் 71% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெக் துறையில் முன்னணியில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசா முறையை தொடர்ந்து நம்பியிருப்பதால், இந்த அதிரடி விசாரணை இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே அமெரிக்க அரசு விசா நடைமுறைகளை கடுமையாக்கி வைத்துள்ளது. விசா விண்ணப்பம் செய்பவர்கள் அவர்களை சார்ந்தவர்களின் சமூகவலைதள கணக்குகள் கூட கண்காணிக்கப்பட்டு தான் விண்ணப்பத்தை ஏற்பதா வேண்டாமா என்ற முடிவே எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விசாரணையின் முடிவில் டிரம்ப் நிர்வாகம் புதிதாக கட்டுப்பாடுகளை விதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

