டிஏபி தலைவர் கோபிந்த் சிங் டியோ, முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்வைத்த, இடைக்கால நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுத்தீன் ஹாருனை டிஏபி கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறினார்.
கூட்டணி அரசின் ஒத்துழைப்பு உணர்வின் கீழ், டிஏபி எப்போதும் மந்திரி பெசார் பதவியின் மரியாதையை மதித்து, தற்போதைய தலைமையை முழுமையாக ஆதரித்து வருகிறது என்று கோபிந்த் தெரிவித்தார்.
அது (கைரியின் குற்றச்சாட்டு) உண்மையல்ல. நெகிரி செம்பிலானில் மந்திரி பெசாருடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதை (டிஏபி பொதுச்செயலாளர்) அந்தோணி லோக் பலமுறை கூறியுள்ளார்.
“மந்திரி பெசார்தான் பொறுப்பில் உள்ளவர். இறுதியில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர் அவர்தான்,” என்று அவர் நேற்று இரவு ஜொகூர் மாநிலத்தின் தங்காக் பகுதியில் நடைபெற்ற டிஏபி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, கைரி ஜமாலுடின், நெகிரி செம்பிலான் மாநில அரசில் அம்னோ இடம்பெற்றிருப்பதால் அங்குள்ள மலாயர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று கூறினார்.
முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி, அந்த மாநிலத்தில் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மட்டுமே மலாயர்கள் என்பதால், அரசின் முன்னுரிமை மலாயர் அல்லாத சமூகத்தினருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த கோபிந்த், மாநில அரசின் அனைத்து முக்கிய முடிவுகளும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்து மற்றும் நல்லிணக்கமான கலந்துரையாடலின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்றார்.
“மற்ற மாநிலங்களில் இருப்பதுபோலவே, இங்கும் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். அனைவரின் கருத்துகளும் பரிசீலிக்கப்படுகின்றன. இறுதியில், மாநிலத்தின் முன்னேற்றமும் வெற்றியும் தான் எங்களின் முக்கிய நோக்கம்”.
“எனவே, அந்தக் கருத்து பொருத்தமானதல்ல என்றும், அது சரியான கருத்தும் அல்ல என்றும் நான் கருதுகிறேன்,” என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
