Cricket
oi-Yogeshwaran Moorthi
மான்செஸ்டர்: இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முதல் வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த சூழலில், தற்போது இங்கிலாந்து மண்ணிலும் இந்திய அணி தடுமாற தொடங்கி இருக்கிறது. இதனால் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்தது சரியான முடிவு தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் எந்த வீரரும் பொறுப்பெடுத்து கடைசி வரை களத்தில் நிற்கவில்லை. திலக் வர்மாவும் கடைசி ஓவரில் மட்டுமே அதிரடி காட்டினார்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இந்திய அணியின் கைகள் ஓங்கி இருந்தது. ஆனால் ரவி பிஷ்னாய் வீசிய ஒரே ஓவரில் ஜேக்கப் பெத்தல் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். அவரின் அதிரடியான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டியது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடிவிட்ட சூழலில், இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வி தொடர்ந்து வருகிறது. இதனால் இந்திய அணியில் ஏதோ ஒரு புது சிக்கல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்தது சரியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் டி20 கிரிக்கெட் அணியின் இடம்பிடித்துள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் திணறுகிறாரா என்ற சந்தேகமும் இருக்கின்றன. இன்னொரு பக்கம் டி20 கிரிக்கெட் அணியின் பவுலிங் இன்னும் முன்னேற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் ஒரே அணியில் விளையாடுவது சரியாக இருக்காது. இந்திய டி20 அணியில் விராட் கோலியை போல் ஆடும் வீரருக்கு இடமே கொடுக்க தேவையில்லை. ஆனால் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம் பெற்றுள்ளதால், அவர் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால் விரைவாக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லவில்லை என்றால், கம்பீர் எடுத்த முடிவு மீதும் சந்தேகங்கள் எழும் என்று பார்க்கப்படுகிறது.

