EPFO கொண்டு வந்த அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட PF சேவைகள் இனி இணையதளத்தில் கிடைக்காது..!!
கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு ஒரு அதிரடியான மாற்றத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், புதிதாக வேலைக்கு சேர்ந்து பிஎஃப் கணக்கு தொடங்கியவர்கள் என அனைவரும் இது குறித்து தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
ஈபிஎஃப்ஓ அமைப்பு தனது ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலை (Unified Member Portal) சமீபத்தில் மேம்படுத்தியது. இதனை அடுத்து பிஎஃப் இணையதளத்தின் Interface மாற்றமடைந்துள்ளது. அதாவது பிஎஃப் இணையதளத்தில் சில வசதிகள் நீக்கப்பட்டு சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் UAN activation மற்றும் புதிய UAN உருவாக்கம் ஆகியவற்றை நேரடியாக EPFO இணையதளத்தில் இனி செய்ய முடியாது.

இதுவரை ஈபிஎஃப்ஓ இணையதளத்தில் செய்யப்பட்டு வந்த UAN ஆக்டிவேஷன் மற்றும் புதிய UAN உருவாக்கம் (Direct UAN Allotment) ஆகிய சேவைகள் இனி ஈபிஎஃப்ஓ இணையதளத்தில் கிடைக்காது. அதற்கு மாற்றாக இந்த சேவைகள் தற்போது UMANG செயலிக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே பிஎஃப் சந்தாதாரர்கள் UMANG செயலியை பயன்படுத்தி, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார முறையை பின்பற்றி மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும்.
மேலும் ஈபிஎஃப்ஓ இணையதளத்தில் UAN-ஐ கண்டறியும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் UAN-ஐ கண்டறியலாம். பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களின் இறப்பு தொடர்பான கோரிக்கைகளை பழைய முறைப்படியே ஈபிஎஃப்ஓ இணையதளம் வழியாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், கோரிக்கைகள் நடைமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
UAN சேவைகள் மட்டும் ஈபிஎஃப்ஓ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு UMANG செயலிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது UMANG செயலியில் UAN ஆக்டிவேஷன் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
· கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து UMANG செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும்
· பின்னர் UMANG செயலியில் EPFO Services என்பதை தேர்ந்தெடுக்கவும்
· இதில் UAN Services Through Face Auth என்ற பகுதிக்குச் சென்று, UAN Activation அல்லது UAN Allotment என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்
· திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆதார் முக அங்கீகாரத்தை நிறைவு செய்யவும்
அவ்வளவு தான் உங்களின் UAN ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். பிஎஃப் சந்தாரர்களுக்கு இன்னும் வேகமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்காகவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முக அங்கீகார முறையை பயன்படுத்துவதன் மூலம் மோசடிகள் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது. இது வந்துவிட்டால் தற்போது போல வார கணக்கில் காத்திருக்காமல் நினைத்த நேரத்தில் யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும்.
