Last Updated:
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்த விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் முடிவுகளுக்காக வரும் 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை தொடர்பான 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும் என்ற புதிய மசோதா கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் கார்ப்பரேட் சட்ட சீர்திருத்தங்கள் போன்ற பிற முக்கிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கூட்டத்தொடருக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவின் 6 எம்.பி.க்கள் கட்சி தாவியது குறித்து சபாநாயகர் முடிவெடுக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20ஆம் தேதி கூடுகிறது மழைக்கால கூட்டத்தொடர்! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் என்ன?


