Last Updated:
இந்தோனேசியாவில் வீடு புகுந்து திருடியதாக 4 பேரை பிடித்து உடல் முழுவதும் டேப் ஒட்டிய சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. அதன் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை பொதுமக்களே பொறிவைத்து பிடித்ததாக செய்திகள் வெளியான நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதே இப்போதுதான் தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் தொடர் திருட்டு சம்பவங்களால் அச்சம் அடைந்த பொதுமக்கள், திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க மக்கள் திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள கடை ஒன்றில் திருடுவதற்காக நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததும், ஏற்கனவே காத்திருந்த கடை உரிமையாளரும், அப்பகுதி மக்களும் சுற்றிவளைத்து பிடித்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.
சிக்கிக்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்லாமல் இருக்க, அவர்களின் வாய், மூக்கு மற்றும் கண்களை தவிர உடல் முழுவதும் அட்டைப்பெட்டிகளில் ஒட்ட பயன்படுத்தும் டேப்களை (tape) பயன்படுத்தி ஒட்டி, காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும், முன்னதாக அவர்களை சித்ரவதை செய்யாமல் அதே நேரத்தில் ரசிக்கும்படியாகதண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த வீடியோ பேசுபொருளானதும், திருடர்கள் தப்பிச்செல்லாமல் இருப்பதற்கு இந்த வழிமுறை பயனுள்ளதாக இருக்குமே என பலரும் ஆர்வமாக கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் பார்ப்பதற்கு டெலிடப்பீஸ் தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாபாத்திரங்களை போன்று இருப்பதாகவும், சிலர் எகிப்து பிரமிடுகளிலுள்ள மம்மிக்கள் போல இருப்பதாகவும் கருத்து பதிவிட்டதால் வீடியோக்கள் வைரலாகின. சட்டத்தை பொதுமக்களே கையில் எடுக்கலாமா எனவும் சிலர் ஆதங்கம் எழுப்பினர்.
இந்த நிலையில் தான் இப்படி ஒரு திருட்டே நடக்கவில்லை என்கிற உண்மை வெளிவந்துள்ளது. ஜாவாவின் மலாங் பகுதியைச் சேர்ந்த நகைச்சுவை வீடியோ உருவாக்கும் யூடியூபர்களால் திட்டமிட்டு இந்த வீடியோவை தயாரிக்கப்பட்டதாக அந்த குழுவை சேர்ந்த ஸ்யாரோனி முஹம்மது உறுதிப்படுத்தி உள்ளார்.
யூடியூப், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இந்த குழுவினர், நேரலையில் பார்வையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது பார்வையாளர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்காக இவ்வாறு செய்ததாக தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்டவர்கள் போன்று பலரும் பல்வேறு கதைகளை பரப்பிவிட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
போலி வீடியோ என்றாலும், மக்களிடையே இந்தோனேசியாவின் காவல்துறை குறித்தும் டெலிடப்பீஸ் (Teletubbies) தொலைக்காட்சித் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் குறித்தும் பேசுபொருளாக்கி உள்ளது.

