ஜோகூர் பாரு:
ஜோகூர், சிகாமாட் (Segamat) பகுதியில் உள்ள சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungai Muar) புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான பணிகள் நில உரிமை (Land Ownership) கட்டத்தை எட்டியுள்ளன.
இவ்விடமாற்ற செயல்முறைகள் தற்போது சிகாமாட் நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்துடன் (Land and Mines Office) இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று சிகாமாட்டில் இப்பள்ளி நிர்வாகத்துடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் (Fadhlina Sidek) நேரில் கலந்து கொண்டு நிலவரங்களை ஆய்வு செய்தார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“சிகாமாட் பகுதி தமிழ் மாணவர்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் உகந்த சூழலில் கல்வி கற்பதை உறுதி செய்ய கல்வி அமைச்சு காட்டி வரும் அக்கறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி அமைச்சரின் இன்றைய வருகை, இத்திட்டத்தை அரசாங்கம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது” என்றார்.
மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு செகாமட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இப்பள்ளியின் உள்கட்டமைப்புப் பிரச்சனைகள், மாணவர் பாதுகாப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பள்ளி தூரமாக அமைந்திருப்பது போன்ற காரணங்களால், இதனை இடமாற்றம் செய்ய தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மடானி அரசு கல்வித் துறைக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றப்படும் வரை இதன் முன்னேற்றங்களைத் தாம் தொடர்ந்து கண்காணித்து வரவிருப்பதாகவும் யுனேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.



