Last Updated:
விளைச்சல் அதிகரித்தும் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால், தஞ்சாவூரில் பல விவசாயிகள் பழங்களை மரத்திலேயே விட்டுவிட்டு, தமிழக அரசின் நிவாரண உதவியை கோரியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மலையப்பநல்லூர், சிவபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ருமானி, பாதுரி, பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆனால், அதிகளவு விளைச்சல் காரணமாக சந்தையில் மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.30-க்கும் மேல் விற்பனையான மாங்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதனால், மாங்காய் விற்பனை விலையை விட அறுவடை கூலி மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது கிடைக்கும் விலை, மாங்காயைப் பறிக்கும் கூலிக்குக் கூட போதுமானதாக இல்லாததால், பலர் பழங்களை மரத்திலேயே விட்டுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.எனவே, மா விவசாயிகளின் இழப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “ஒரு ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்ய ரூ.25 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. மாங்காய் பறிப்பதற்கே ஒரு நாளுக்கு ரூ.1,500 வரை கூலி செலுத்த வேண்டியுள்ளது. செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காதது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 3,000 ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
Jul 03, 2026 11:42 AM IST
