International
oi-Vigneshkumar
அண்டார்டிகா: இப்போது தங்கம் விலை கொஞ்சம் சரிந்தாலும் கூட அவை சாமானியர்கள் எளிதாக வாங்க முடியாத ரேட்டியேலே விற்று வருகிறது. அப்படியிருக்கும்போது எரிமலையில் ஒன்று ஒவ்வொரு நாளும் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கக்கி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அது என்ன எரிமலை இதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பூமியின் தென் துருவத்தில் பனிப்பாறைகளுக்கு நடுவே அமைந்துள்ள மவுண்ட் எரெபஸ் (Mount Erebus), பூமியில் உள்ள மற்ற எரிமலைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்த எரிமலை இப்போதும் ஆக்டிவாக இருக்கும் எரிமலைகளில் ஒன்றாகும்.. இது நிரந்தர எரிமலை குழம்பு ஏரியைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், தினமும் நுண்ணிய தங்கத் துகள்களையும் கக்கி வருவது தான் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூய தங்கம்
1991ஆம் ஆண்டு ஆண்டிலேயே இது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பித்துவிட்டன. அதில் மவுண்ட் எரெபஸ் எரிமலையில் இருந்து தினமும் சுமார் 80 கிராம் அளவுக்கு தூய தங்க துகள்கள் வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மார்கெட் ரேட்டிற்கு கணக்கிட்டால் இதன் மதிப்பு ஒரு நாளுக்கு சுமார் 6,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.6 லட்சம்) ஆகும். ஆண்டுக்கு இது 20 லட்சம் டாலருக்கும் (சுமார் ரூ.19 கோடி) அதிகமான தங்க துகள்களை இது வெளியிடுகிறது.
இந்த எரிமலை, தென் முனையில் இருந்து சுமார் 1,350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஸ் தீவில் (Ross Island) அமைந்துள்ளது. இதன் லாவா ஏரியில் இருந்து தொடர்ந்து வெளியேறும் வெப்பமான எரிமலை வாயுக்களுடன் மிக சிறிய தங்க துகள்களும் வெளியேறுகின்றன. இந்த துகள்கள் காற்றின் உதவியுடன் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து அண்டார்டிகா பனிப்பரப்பில் படிவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏன் முக்கியம்
இது ஏதோ முற்றிலும் புதிய விஷயம் இல்லை. எரிமலை வாயுக்களில் தங்கத்தின் சுவடுகள் இருப்பது புதிய விஷயம் இல்லை. ஹவாயில் உள்ள கிலாவேயா, இத்தாலியின் எட்னா, அலாஸ்காவின் ஆகஸ்டின் மற்றும் மெக்சிகோவின் எல் சிச்சோன் போன்ற எரிமலைகளிலும் சிறிய அளவில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. எரிமலையின் அதிக வெப்பத்தில் தங்கம், குளோரின் அல்லது கந்தகம் நிறைந்த வாயுக்களுடன் இணைந்து மேலே செல்கிறது. பின்னர் அந்த வாயுக்கள் குளிரும்போது, தங்கம் தனியாகப் பிரிந்து படிகங்களாக மாறுகிறது.
இப்படி மற்ற எரிமலைகளிலும் தங்கம் இருக்கிறது என்றால் இந்த எரெபஸுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மற்ற எரிமலைகளில் இருந்து வெளியே வரும் தங்கம் எல்லாம் தூசிகளைப் போல இருக்கும். அவற்றுக்கு முறையான வடிவம் எதுவும் இருக்காது. ஆனால், இந்த எரெபஸில் இருந்து வெளியே வரும் தங்கம் எல்லாம் ஒரே சைஸில் பக்காவான துகள்களாக வரும். அதுவே ஆய்வாளர்களுக்கு பெரும் வியப்பைக் கொடுப்பதாக இருக்கிறது.
இரு விளக்கங்கள்
மவுண்ட் எரெபஸில் மட்டும் இந்த செயல்முறை ஏன் இவ்வளவு வித்தியாசமாக நடக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஒன்று குளோரின் நிறைந்த எரிமலை வாயுக்கள் குளிரும்போது தங்கம் நேரடியாகப் படிகங்களாக மாறுகிறது.
குளோரின் அதிகம் இருக்கும் வெப்பமான எரிமலை வாயுக்களால் தங்கம் மேல்நோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது. எரிமலையிலிருந்து வெளியேறும் இந்த வாயுக்கள் அண்டார்டிகாவின் குளிர்ந்த காற்றில் பட்டு திடீரென குளிர்ச்சி அடையும்போது, தங்கம் படிகங்களாக மாறுகிறது. அடுத்த விளக்கம்.. தங்கம் படிகங்கள் முதலில் எரிமலைக்குள்ளேயே, அதாவது அங்குள்ள நிரந்தர எரிமலைக்குழம்பு ஏரியின் மேற்பரப்பில் மிக மெதுவாக உருவாகிறது. அவை எரிமலைக்குழம்பின் மீது தங்கப் படிகங்கள் முழுமையாக உருவான பிறகு, வெளியேறும் எரிமலை வாயுக்கள் அவற்றை எடுத்து வளிமண்டலத்திற்குள் வேகமாக வீசுகின்றன.
உண்மை என்ன
அதாவது ஒரு தரப்பு தூசியாக வெளியே வரும் தங்கம், வெளியே வந்த பிறகு இப்படிச் சரியான வடிவத்தில் மாறுகிறது என்கிறார்கள். இன்னொரு தரப்பு எரிமலைக்குள்ளேயே அவை சரியான வடிவத்தில் உருவாகி வெளியே வருகிறது என்கிறார்கள். ஆனால், இந்த இரண்டிற்குமே உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இன்றும் மவுண்ட் எரெபஸ் எரிமலை எப்படி தினமும் நுண்ணிய தங்கப் படிகங்களை உருவாக்கி வெளியிடுகிறது என்பது இன்னும் விஞ்ஞான உலகின் மிக பெரிய மர்மங்களில் ஒன்றாகவே நீடித்து வருகிறது.



