த.வெ.க. அரசை கவிழ்க்க சதி
இப்படி, தமிழக அரசியலில் தினம் ஒரு பரபரப்பு தகவலாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று உச்சகட்ட பரபரப்பாக, த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. விலைக்கு வாங்க முயன்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான திருநாவுக்கரசர் என்பவர் போனில் தொடர்பு கொண்டு, தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது தொடர்பாக, த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல், மேலும் 14 த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கவர்னருடன் சபாநாயகர் சந்திப்பு
த.வெ.க. அரசை கவிழ்க்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டது உண்மைதானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 100 சதவீதம் தயாராக இருங்கள்” என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில்தான், கடந்த மாதம் 29-ந் தேதி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கவர்னர் அர்லேக்கரை கிண்டி மக்கள் மாளிகையில் சென்று சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.
ஆனால், இந்த திடீர் சந்திப்பு ஏன் நடந்தது? என்று அப்போது எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை.
