(கோகி கருணாநிதி)
மூவார்:
ஜோகூர் மாநில 16வது சட்டமன்றத் தேர்தலில் சுங்கை பாலாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அய்னா சோராயா பதாருடின், தனது கடல்சார் பொறியியல் அனுபவத்தை பயன்படுத்தி அப்பகுதியின் மீன்வளத் துறையை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக மாற்ற
உறுதியளித்துள்ளார்.
31 வயதான அவர், பாரிட் ஜாவா மற்றும் பந்தாய் லேக்கா பகுதிகளில் மீன்பிடித் துறைக்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, படகுத் துறைமுகங்கள், மீன்பிடி இறக்குமதி வசதிகள், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைமேம்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வருமானத்தையும் புதிய
வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்றார்.
மீன்வளத் துறையில் இளைஞர்களின் பங்களிப்பு தற்போது மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (திவெட்), திறன்பயிற்சி, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை இந்தத்
துறையில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் தனித்தாய் குடும்பங்களுக்கான திறன் பயிற்சி, வருமானம் ஈட்டும் வாய்ப்புகள், இலக்குப்படுத்தப்பட்ட உதவித் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறினார்.
இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் தொடர்பு இயக்குநரான டத்தோ பஹ்மி பட்சில், இம்முறை ஜோகூர் மாநிலத் தேர்தலில் இளைஞர்களின் குரலை
பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான இளம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக
தெரிவித்தார். மேலும், மதம், இனம், அரச குடும்பம் (3R) தொடர்பான உணர்வுபூர்வ
விவகாரங்களைத் தவிர்த்து, கொள்கை மற்றும் வேட்பாளர்களின் திறமைகளை
மையமாகக் கொண்டு அனைத்து கட்சிகளும் முதிர்ச்சியான தேர்தல் பிரச்சாரத்தை
முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



