Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்ட பிறகு தற்போது குறைந்து வருவதால், பலரும் இப்போது தங்கள் வீட்டில் உள்ள பழைய நகைகளை விற்று பணமாக்கி வருகிறார்கள். தங்கம் விலை சரிந்தாலும் இன்னும் பாதாளத்திற்குப் போகவில்லை. இதனால் இப்போதே பழைய தங்கத்தை விற்கும் முடிவை மக்கள் எடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு அது உச்சத்திற்குப் போனது. அதன் பிறகு தங்கம் சீராகக் குறைந்தே வருகிறது. இன்றைய தினம் கூட ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 குறைந்து, ரூ.13,300க்கு விற்பனையாகிறது.

என்ன காரணம்
இது சில வாரங்களுக்கு முன்பு விற்பனையான வரலாற்று உச்சத்தை விட குறைவு. இதனால் மக்கள் பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றுவதற்குப் பதிலாக நேரடியாக விற்கத் தொடங்கியுள்ளனர். விலை மேலும் குறையும் என்ற அச்சம் தான் இதற்கு முக்கிய காரணம். அப்படி நடந்தால் தங்கள் நகைகளுக்குக் குறைந்த விலை கிடைக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
ஏப்ரல்- ஜூன் காலாண்டில் இந்திய மக்கள் சுமார் 50 டன் பழைய தங்கத்தை விற்றுள்ளதாக இந்திய புல்லியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.. இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகம். தங்கம் விலை இப்போது உச்சத்தில் இருக்கும் சூழலில், இதைப் பயன்படுத்தித் தங்கத்தை விற்று லாபம் பார்க்க வேண்டும் என மக்கள் நினைப்பதே இதற்குக் காரணம்.
தங்கம் சரிவு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்க விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. பின்னர் சில வாரங்களில் கடுமையாகச் சரிந்தது. இப்போது வல்லுநர்கள் பலரும் தங்கம் விலை மேலும் குறையலாம் என்றே சொல்கிறார்கள். இப்போது கிராமுக்கு 13,500 முதல் ரூ.14,000 என்ற ரேஞ்சில் இருக்கும் சூழலில் அது ரூ.12,000 வரை குறையலாம் என வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே இப்போதே மக்கள் கையில் இருக்கும் தங்கத்தை விற்கிறார்கள்.
இது தொடர்பாக இந்திய புல்லியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் தேசிய செயலர் சுரேந்திர மேத்தா கூறுகையில், “தங்கம் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் சூழலில், அதைப் பயன்படுத்தி பணம் பார்க்க மக்கள் முயல்கிறார்கள். மேலும் விலை குறையும் என்ற பயம் காரணமாகவே பலரும் கையில் இருக்கும் தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.
காரணங்கள்
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிந்தே வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேசமயம் அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு தங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது பொதுவாகத் தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கும். ஏனெனில் தங்கம் எந்த நிலையான வருமானத்தையும் தராது. எனவே முதலீட்டாளர்கள் வட்டி தரும் கடன் பத்திரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.
மேலும், பழைய தங்கம் விற்கப்படுவது இந்திய பொருளாதாரத்திற்கும் நல்லதாகவே இருக்கிறது. இதனால் புதிய தங்கம் இறக்குமதி செய்யும் தேவை குறைவதால் அந்நிய செலாவணி செலவாவதும் குறைகிறது. இப்போதும் கூட இந்திய வீடுகளிடம் சுமார் 30,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதில் கணிசமான தங்கம் மறுசுழற்சிக்கு வந்தாலே தங்கத்திற்கான இறக்குமதி குறையும்! FY26-ல் இந்தியா சுமார் 72.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்தது. மறுசுழற்சி தங்கம் அதிகரிக்கும்போது, தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறையும்.
என்ன செய்யலாம்!
இப்போது பொதுமக்கள் பலரும் தங்கத்தை விற்பனை செய்தாலும் கூட அனைவரும் விற்றே ஆக வேண்டும் என இல்லை. இது தனிப்பட்ட நிதி தேவைகளைப் பொறுத்தே மாறுபடும். மேலும், குறுகிய கால விலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு லாபம் பார்க்கலாம் என முடிவெடுப்பது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது என்கிறார்கள் வல்லுநர்கள்!
அதாவது பழைய நகைகளைப் பயன்படுத்தாமல் வைத்திருப்போர் நிதி தேவை இருந்தால் அதை விற்க இந்த விலை சரியான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. ஆனால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்குப் பணவீக்கம், புவியியல் அரசியல் குழப்பம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராகத் தங்கம் பாதுகாப்பான ஒரு முதலீடாகவே இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.



