Last Updated:
கேரளாவின் கோழிக்கோடு பந்தீராங்காவ் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற காரின் பேனட்டில் ஊழியர் தொங்கியபடி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீராங்காவ் டோல் பிளாசாவில் டோல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க முயன்ற சொகுசு கார் ஒன்று, அதைத் தடுக்க முயன்ற டோல் ஊழியர் மீது மோதி, அவரை காரின் போனட்டில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற கார், டோல் பிளாசாவிற்கு வந்தது. அப்போது அதற்கு முன்னால் நின்ற காரின் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு டோல் பார் உயர்ந்தது. அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பின்னால் இருந்த இந்த வெள்ளை நிற காரும் கட்டணம் செலுத்தாமல் வேகமாகத் தப்ப முயன்றது. காரின் இந்த அத்துமீறலைக் கண்டு அங்கிருந்த டோல் ஊழியர் உடனடியாக காரை நிறுத்த முயன்றார். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அவர் மீது ஓட்டினார். ஊழியர் அதிர்ஷ்டவசமாக காரின் அடியில் சிக்காமல் இருக்க, உடனடியாக காரின் போனட் மீது குதித்து அதைப் பிடித்துக் கொண்டார்.
ஊழியர் போனட்டில் தொங்குவதைப் பார்த்தும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு காரை வேகமாக ஓட்டிச் சென்றார். சிறிது தூரம் சென்ற பின் கார் நிறுத்தப்பட்டது. மற்ற ஊழியர்கள் ஓடி வந்து காரை வளைத்துப் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த பயணிகள், கீழே விழுந்த டோல் ஊழியரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
காயம் அடைந்த டோல் ஊழியர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பந்தீராங்காவ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து காரின் உரிமையாளரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். காரில் இருந்த பயணிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற கார்… தடுத்த ஊழியரை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற கார்… கேரளாவில் அதிர்ச்சி


