வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மகளை பாதுகாத்த கால்பந்து வீரரின் மனைவி தனது உயிரை இழந்துள்ளமை தொடர்பில் கால்பந்து வீரரின் பதிவு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தலைநகர் காரகஸில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் வெனிசுலா கால்பந்து நட்சத்திர வீரர் ஹெக்டர் பெல்லோ உடைய மனைவியான ஆண்ட்ரியா என்பவரே உயிரிழந்தவராவார்.
மகளை காப்பாற்றி உயிரைவிட்ட தாய்
அதிர்ஷ்டவசமாக அவர்களது 20 மாத பெண் குழந்தை அலானா இடிபாடுகளுக்குள் தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்டாள். குழந்தை தற்போது காரகஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

கட்டிடம் இடிந்துவிழும்போது மகள் அலானாவுக்கு அரண் போல செயல்பட்டு ஆண்ட்ரியா காப்பாற்றியுள்ளார். இந்த முயற்சியிலேயே ஆண்ட்ரியா உயிரிழந்துள்ளார்.
கணவரின் உருக்கமான பதிவு
தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, ஹெக்டர் பெல்லோ இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
மகள் அலானா தன் உயிரைக் காத்த தாய்க்கு நன்றி சொல்வது போல தொடங்கும் அந்த பதிவில், “அம்மா, நீ தான் என்றும் எனக்கு பிடித்தமான ஹீரோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பதிவில் ஹெக்டர் பெல்லோ,
“நம் குழந்தைக்கு நீ எவ்வளவு அற்புதமான தாயாக இருந்தாய் என்றும், அவளுக்கு எவ்வளவு அன்பு கொடுத்தாய் என்றும் நான் அவளிடம் சொல்வேன்.
அவளைக் காப்பாற்ற நீ உன் உயிரை எப்படித் தியாகம் செய்தாய் என்ற கதையை நான் அவளிடம் சொல்வேன்.
இறுதிவரை தன் மகளைக் கைவிடாத ஒரு துணிச்சலான பெண் நீ” என்று எழுதியுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளை குறிப்பிட்டு எழுதிய பதிவில்,
“மகளே, நீ வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் சிறிது காலம் பொறுத்திரு. என் உடைந்த இதயத்தை உன்னால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
ஒரு மகிழ்ச்சியான தந்தையாக என்னை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால் உன்னை இந்த உலகின் மிக மகிழ்ச்சியான குழந்தையாக வளர்ப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.
இப்போது நீயும் நானும் மட்டும்தான்
இப்போது நீயும் நானும் மட்டும்தான், அம்மா சொர்க்கத்திலிருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பார்.
ஆண்ட்ரியா எனக்கு வலிமை தருவாள் என்று எனக்குத் தெரியும்.

தனது கடைசி நிமிடத்தில் அவள் என்னிடம் ஏதாவது சொல்ல விரும்பியிருந்தால், அது கண்டிப்பாக, அவள் செய்தது போலவே, நானும் என் உயிரைக் கொடுத்து உன்னை(அலனா) காப்பாற்ற சொல்லியிருப்பாள்” என்று பெல்லோ குறிப்பிட்டுள்ளார்.
மகளை காப்பாற்றி தனதுயிரை விட்ட நிலையில் கணவரின் இந்த உருக்கமான பதிவு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

