Last Updated:
6 ஆண்டுகளுக்குப் பின் புருஷோத்தமனின் மகன் தனபிரவீன், அவரின் நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த கலைவேந்தன் மற்றும் பிரசாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் ஹாலிவுட் படத்தை பார்த்து சொத்துக்காக தந்தையை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின் அவரின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலம் ஐய்யங்குட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் 50 வயதான புருஷோத்தமன். சேதராபட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கடந்த 2020 டிசம்பர் 23ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் எந்தவித தடயமும் விட்டு வைக்காமல் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தது. கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் கடந்த 6 ஆண்டுகளாக காவல்துறைக்கு கடும் சவால்கள் நீடித்தது.
இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடி ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான தனிப்படைக்கு மாற்றப்பட்டது. பழைய செல்போன் சிக்னல்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் மறைமுக சாட்சிகள் என சல்லடை போட்டு போலீசார் அலச ஆரம்பித்தனர். அதில் பேரதிர்ச்சியாக புருஷோத்தமனை, அவர் பெற்ற மகனான 29 வயது தனபிரவீன் திட்டமிட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெட்ரோல் பங்க் நடத்தி வந்த புருஷோத்தமன், கருத்து வேறுபாட்டால் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
மனைவி தனது மகளை அழைத்துச் சென்றதும், புருஷோத்தமனுடன் அவரின் மகன் தனபிரவீன் வசித்து வந்துள்ளார். அப்போது, பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த ஒரு பெண்ணை புருஷோத்தமன் இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால், சொத்து அனைத்தும் அந்த பெண்ணுக்கு சென்று விடும் என்பதால் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் 6 ஆண்டுகளுக்குப் பின் புருஷோத்தமனின் மகன் தனபிரவீன், அவரின் நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த கலைவேந்தன் மற்றும் பிரசாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் “தி மெக்கானிக்” திரைப்படம் போன்று திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது. தி மெக்கானிக் படத்தில் நாயகன் தடயம் இல்லாமல் எப்படி கொலை செய்வது என்பதை நீண்ட காலமாக ஆய்வு செய்த எதிரிகளை போட்டுத் தள்ளுவார். மேலும், திருட்டு பைக்கில் சென்று கொலைச் சம்பவத்தை அரங்கேற்றுவார். பின்னர் அந்த பைக்கை பிரிந்த்து மேய்ந்து அடையாளத்தை மறைத்துவிடுவார்.
அதேபோன்று தனபிரவீனின் நண்பர்கள் இருவரும் பல நாட்களாக திட்டமிட்டு தடயமே இல்லாமல் பெட்ரோல் பங்க் ஓனரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. விழுப்புரத்தில் இருந்து திருட்டு பைக்கை எடுத்து வந்து கொலைபாதக செயலை செய்துவிட்டு, அந்த பைக்கை பிரிந்து மேய்ந்து தடயமே இல்லாம தப்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் தந்தையை கொலை செய்யும் முடிவை தனபிரவீன் கைவிட்ட போதும், அவருக்கு தெரியாமலேயே புருஷோத்தமனை நண்பர்கள் கொலை செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளான கலைவேந்தன் மற்றும் பிரசாந்த் இருவரும் ஏற்கனவே குற்ற வழக்கில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். அங்கு கிடைத்த பல்வேறு அனுபவத்தின் அடிப்படையில் தடயம் இன்றி எப்படி கொலை செய்வது என்பதை ஒத்திகை பார்த்து செய்து முடிந்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். தந்தை இரண்டாவது திருமணம் செய்தால் பெட்ரோல் பங்க் கைவிட்டுப் போய்விடும் என்று நினைத்த மகன், வில்லங்கமான வேலையில் இறங்கியிருக்கிறார்.
அந்த பெட்ரோல் நிலையத்தின் வாரிசாக மனைவியின் பெயரையே புருஷோத்தமன் குறிப்பிட்டிருந்ததால் கொலை சம்பவத்தை தொடர்ந்து உரியவருக்கே அது சென்றடைந்தது. ஆனால், பெட்ரோல் நிலையம் கைவிட்டு போய்விடுமோ என்று அஞ்சி தந்தையையே கொலை செய்த மகன், குடும்ப சொத்தை அனுபவிக்க முடியாமல் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


