திருப்பதியில் மொட்டை அடித்த ஆனந்த் அம்பானி! கூடவே தேவஸ்தானத்திற்கு ரூ.25 கோடி EV பேருந்துகள் நன்கொடை!
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். தற்ப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டைரக்டராக இருக்கிறார் ஆனந்த்.
இவர் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையானுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினார். தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு கோயில் வளாகத்திற்கு அருகில் உள்ள ரங்கநாயகலு மண்டபத்தில் வேத வித்வான்கள் ஆனந்துக்கு வேத ஆசீர்வாதம் வழங்கி ஆசீர்வதித்தனர். அதைத்தொடர்ந்து திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் ஆனந்த் அம்பானிக்கு ஸ்ரீவாரி தீர்த்த பிரசாதங்களை வழங்கி, பட்டு வஸ்திரங்களை அணிவித்து கௌரவித்தனர்.
மின்சார பேருந்துகள்: தனது ஆன்மீகப் பயணத்தில் எண்ணற்ற நன்கொடைகளை ஆனந்த் அம்பானி வழங்கி வருகிறார். அந்த வகையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு தற்போது 25 எலக்ட்ரிக் பேருந்துகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.27.5 கோடி இருக்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வழங்கப்படும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு 50 ஓட்டுநர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளையும் ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்கும் என்று ஆனந்த் உறுதியைளித்துள்ளார். வழங்கப்படும் பேருந்துகள் மின்சார அடிப்படையில் இயங்குபவை என்பதால் அதற்கான சார்ஜிங் நிலையங்களையும் திருமலையிலேயே அமைப்பதற்கும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காகவே உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் தினசரி அடிப்படையில் குவிந்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த மின்சார பேருந்து கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவஸ்தானம் கூட்ட நெரிசலை குறைத்து பக்தர்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக ஆன்லைன் டிக்கெட் விற்பனையிலும் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி இனி ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கிய நபர்கள் எளிதாக தரிசனம் செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலமாக திருப்பதி தேவஸ்தானம் 1500 டிக்கெட் களை வழங்கி வருகிறது. அதில் மூன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்பவர்களுக்காக 500 டிக்கெட்டுகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 800 டிக்கெட்டுகள் தினசரி அடிப்படையில் சுவாமி தரிசனம் செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 200 டிக்கெட்கள் ஸ்பாட் புக்கிங் என்று சொல்லப்படுகிற திருப்பதி விமான நிலையத்தை அடைந்தவுடன் புக்கிங் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இனிய தினசரி புக்கிங் செய்யப்படும் 800 டிக்கெடுக்களில் இருந்து 300 டிக்கெட்டுகளை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ,10,000 நன்கொடை வழங்கிய நபர்களுக்காக ஒதுக்க தேவஸ்தான முடிவு எடுத்துள்ளது. இதற்கு தகுதி பெற 2025 ஆம் ஆண்டின் மே 1-ஆம் தேதிக்குப் பிறகு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவராக இருக்க வேண்டும். நன்கொடை வழங்கிய பிரிவில் டிக்கெட் புக் செய்யப்படவில்லை என்றால் அவை ஸ்பாட் டிக்கெட் புக்கிங் ஸ்லாட்டுக்கு மாறிவிடும் என்றும் TTD தெரிவித்துள்ளது.

