Cricket
oi-Yogeshwaran Moorthi
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்காததே காரணமாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை சேர்த்திருந்தால், இந்திய அணி இப்படியொரு வரலாற்று தோல்வியை அடைந்திருக்காது என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அசத்தியது.

அயர்லாந்து அணி தரப்பில் டக்கர் 50 ரன்களும், டெலானி 49 ரன்களையும் எடுத்தனர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா மட்டுமே அரைசதம் கடந்தார். அதேபோல் சிவம் துபே 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல்முறையாக அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணமாக வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்காததே என்று பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இன்றைய ஆட்டத்தில் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் தொடக்க கூட்டணியை மீண்டும் கம்பீர் களமிறக்கினார்.
வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், இந்திய அணியின் பேட்டிங்கில் வலிமை அதிகரித்திருக்கும். இன்றைய பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது தேவையில்லாத ஒன்று. அக்சர் படேல் இருக்கும் போது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பவுலிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் ஒரேயொரு ஓவர் மட்டுமே வீசி இருந்தார். பேட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாட முயன்று 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருவேளை வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை நம்பர் 3 வரிசையில் விளையாட வைத்திருந்தால், இந்திய அணியின் டாப் ஆர்டர் வலிமை உச்சத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

