Tamilnadu
oi-Rajkumar R
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் இணைப் பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 12ஆம் தேதி தனி செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஆணை தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில், முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி கடந்த மே 12-ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நியமனத்திற்கான விதிமுறைகள் மற்றும் பணிநிபந்தனைகள் பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஜெகதீஷ் பழனிசாமி அந்தப் பொறுப்பில் செயல்பட்டு வந்திருக்கலாம் என்கின்றனர்.

ஜெகதீஷ் பழனிசாமி
ஜெகதீஷ் பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்தின் சாதாரண நிர்வாகி அல்ல. நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் பயணம் வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நெருக்கமாக பணியாற்றி வரும் நபராக அறியப்படுகிறார். விஜயின் பல்வேறு நிகழ்ச்சிகள், நிர்வாக பணிகள், ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்ற அடையாளம் அவருக்கு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிறகு கட்சியின் தேர்தல் வியூகம், தரவு சேகரிப்பு, களப்பணிகள், வார் ரூம் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளை ஜெகதீஷ் பழனிசாமி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தேர்தல் காலத்தில் திரைமறைவில் செயல்பட்டு கட்சியின் வெற்றிக்கு பங்களித்தவர்களில் முக்கியமானவராகவும் அவர் பார்க்கப்படுகிறார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்த பிறகு கட்சி நிர்வாகத்தில் இருந்த பலர் அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தனிச் செயலாளர்
அந்த வரிசையில் தற்போது ஜெகதீஷ் பழனிசாமிக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு தனிச் செயலாளர் என்பது சாதாரண பதவி அல்ல. அரசியல் ஆலோசனைகள், கட்சி மற்றும் அரசு இடையேயான ஒருங்கிணைப்பு, முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் இந்தப் பதவியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதனால், ஜெகதீஷ் பழனிசாமியின் செல்வாக்கு அரசு நிர்வாகத்திலும் அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முதலமைச்சர் விஜய்
இந்த நியமனம் தொடர்பாக ஜெகதீஷ் பழனிசாமியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன் என்ற வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பதிவு வெளியாகியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இடும்பவனம் கார்த்திக்
இந்நிலையில், இந்த நியமனம் குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில்,” ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் – 674, ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் – 675, இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
முதல்வரின் தனிச்செயலர்
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கும் ஒரு காரணம் உண்டு.
ரத்தன் பண்டிட்
இதற்கு முன்பு முதல்வரின் அரசியல் பிரிவில் சிறப்பு பணியாளர் அதிகாரியாக ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜோதிடர் என்ற அடையாளத்துடன் இருந்த அவரின் நியமனம் சட்டப்பேரவை முதல் சமூக வலைதளங்கள் வரை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த நியமனம் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அந்த சர்ச்சை முழுமையாக அடங்காத சூழலிலேயே தற்போது ஜெகதீஷ் பழனிசாமியின் நியமனம் புதிய அரசியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.



