முதலமைச்சர் விஜய்-இன் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பம் செய்வது?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தன்னுடைய முக்கியமான ஒரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அடுத்த சிக்ஸரை அடித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை தந்திருந்தார். குறிப்பாக பெண்களின் வாக்குகளை அள்ளும் வகையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் இருந்தன.
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் திட்டம், அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம், திருமணத்தின் போது தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம், குழந்தைப்பேறின் போது தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை தவெக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

இந்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என ஏராளமான மகளிர் காத்திருந்த நிலையில் ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்களுக்காக அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizham vision document) தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வடிவமைக்கப்பட்டு இன்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தில், “தாய்மாமன் சீர்” என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதார சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்” (Thaalmaaman Thanga Mothira Thittam) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்று கொண்டால் அந்த குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம் இனி இலவசமாக கிடைக்கும். செப்டம்பர் 15ஆம் தேதி விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தாலும் , விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம், தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளிலேயே குழந்தை பிறப்பு விவரங்கள் பதியப்பட்டிருக்கும் என்பதால் இது தொடர்பாக அரசு சார்பிலேயே பெற்றோருக்கு தகவல் அளிக்கப்படும். அப்போது அரசு கூறும் ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து தங்க மோதிரம் பெற்று கொள்ளலாம். இன்றைய தேதிக்கு 22 கேரட் ஆபரணத்தங்கத்தில் ஒரு கிராம் மோதிரம் சராசரியாக 15,600 ரூபாய்க்கு கிடைக்கிறது.

