Last Updated:
அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள், அமலாக்க முகமைகள், இந்த அறிவிப்புகளைக் கடுமையாகச் செயல்படுத்துவதையும், அவற்றுக்கு இணங்குவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், மருந்துகளின் முறையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சுகாதாரம் அமைச்சகம், 1940-ம் ஆண்டின் மருந்துப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 26ஏ-ன் கீழ், 16 நிலையான மருந்துக் கலவைகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்திற்குத் தடை விதித்து அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
நாட்டில் கிடைக்கும் நிலையான அளவு மருந்துக் கலவைகள் (Fixed Dose Combinations) எனப்படும் எஃப்டிசி-கள் குறித்து ஒரு விரிவான ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (DTAB), பல்வேறு நிலையான அளவு மருந்துக் கலவைகளை ஆய்வு செய்து, அதில் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை எவை என்பதைக் கண்டறிவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.
நிபுணர் குழுவின் அறிவியல் மதிப்பீடு, பரிந்துரைகளின் அடிப்படையில், சிகிச்சைக்கான பொருத்தம் இல்லாத மருந்துக் கலவைகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தடைசெய்யப்பட்ட எஃப்டிசி-கள், சில தோல் மருத்துவத் தயாரிப்புகள், வலி நிவாரணி, தசைப்பிடிப்பு நீக்கி மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு அடிப்படையிலான மருந்துக் கலவைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வகைகளைச் சேர்ந்தவை.
தடைசெய்யப்பட்ட மருந்து கலவைகள்
பாதுகாப்பான, செயல்திறன் மிக்க, அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள், அமலாக்க முகமைகள், இந்த அறிவிப்புகளைக் கடுமையாகச் செயல்படுத்துவதையும், அவற்றுக்கு இணங்குவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Jun 20, 2026 10:45 PM IST


