Last Updated:
2026 ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது.
2027 சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டிரேட் முறையில் வீரர்கள் பரிமாற்றம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
இந்த மெகா டீலிங் ஒப்பந்தத்தின்படி, டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை லக்னோ அணிக்கு மாற்ற இரு நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான ஆவணங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச தொகையான 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்திருந்தது. மேலும், கே.எல்.ராகுலுக்குப் பதிலாக அவர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
குறிப்பாக, சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் பண்ட் எதிர்பார்த்த ஃபார்மில் இல்லை (14 போட்டிகளில் 312 ரன்கள் மட்டுமே எடுத்தார்).
இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 2026 சீசன் முடிந்த கையோடு அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அணியுடன் நீண்ட கால பந்தம் கொண்ட ரிஷப் பண்ட், ஏற்கனவே 2016 முதல் 2024 வரை அந்த அணிக்காக விளையாடி கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2025 ஏலத்தின் போது ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் வெளியேறிய அவர், தற்போது டெல்லி அணியின் மேலாண்மைப் பொறுப்பு JSW குழுமத்தின் கைக்கு மாறியுள்ளதால் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப ஆர்வம் காட்டியுள்ளார்.
இந்த டிரேடு முறை சாத்தியமாவதற்கு நிதி ரீதியாக ஒரு பெரிய தடை இருந்தது. எந்தவொரு அணியும் தங்களது பர்ஸ் தொகையிலிருந்து ஒரே வீரருக்கு 27 கோடி ரூபாயை டிரேடு முறையில் செலவிட முடியாது. இதற்காக, ரிஷப் பண்ட் மிக துணிச்சலான ஒரு முடிவை எடுத்துள்ளார். தனது சம்பளத்தை 27 கோடி ரூபாயில் இருந்து தோராயமாக 15 கோடி ரூபாயாகக் குறைத்துக் கொள்ள அவர் சம்மதித்துள்ளார். இதன் மூலம் டெல்லி அணிக்குத் திரும்பும் பட்சத்தில், பண்ட் ஆண்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் வரை மிகப்பெரிய வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பந்த்? ஐபிஎல் அடுத்த சீசனில் நடக்கப்போகும் அந்த ‘மெகா மாற்றம்’ இதுதான்!


