Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: லக்னோ அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகிவிட்ட சூழலில், டெல்லி அணிக்கு டிரேட் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய பரபரப்புச் செய்தியாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-ன் டிரேட் விவகாரம் தான் மாறி இருக்கிறது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்ப அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோ அணியின் நிர்வாகமும் ரிஷப் பந்தின் கேப்டன்சி ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது.
2024 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி நிர்வாகம் ரூ.27 கோடி கொடுத்து ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது. லக்னோ அணியை வழிநடத்தும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ரிஷப் பந்தின் தலைமையின் கீழ் கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணி மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை.
கடந்த சீசனில் 7வது இடத்தைப் பிடித்த லக்னோ, இந்த 2026 ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த தொடர் தோல்விகள் மற்றும் கேப்டன்சி அழுத்தத்தால் தனது பேட்டிங் ஃபார்மும் பாதிக்கப்பட்டதை உணர்ந்த ரிஷப் பந்த், கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்தார்.
லக்னோ அணியில் இருந்து ஒரு சாதாரண பிளேயராக நீடிப்பதை விட, வரவிருக்கும் டிரேடிங் விண்டோ மூலமாக தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற ரிஷப் பண்ட் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, 2016 முதல் 2024 வரை டெல்லி அணியின் தூணாகவும் கேப்டனாகவும் விளங்கியவர் ரிஷப் பண்ட்.
இதனால் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்புவது Homecoming போல இருக்கும் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர். லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளின் நிர்வாகங்களுக்கு இடையே இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போதே தொடங்கிவிட்டதாக உள்விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த டிரேட்டின் ஒரு பகுதியாக, டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், லக்னோ அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணிக்கு விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக குல்தீப் யாதவ்வை லக்னோ அணி கேட்க வாய்ப்புள்ளது. டெல்லி அணியின் கட்டுப்பாடுகள் மீண்டும் ஜேஎஸ்டபிள்யூ நிர்வாகம் வசம் வந்துள்ளது. இதனால் டெல்லி அணியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது.

