Last Updated:
ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 94 ஆக உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று தேவஜித் சய்கியா தெளிவுபடுத்தியுள்ளார்.
பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சய்கியா, அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும். ஆனால், மே மாதத்தின் பிற்பாதியில் நிலவும் கடுமையான கோடை வெப்பம் மற்றும் முன்கூட்டியே பெய்யும் பருவமழை ஆகியவை வீரர்களுக்கும், மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த ஆலோசனையை மேற்கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருப்பது ஐபிஎல் தொடரின் 20-வது சீசன் ஆகும். இதனை மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி, மே 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உள்நாட்டுப் போட்டிகளின் பொது மேலாளர் அபே குருவில்லாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் மார்ச் 10-க்குள் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த புதிய கால அட்டவணையில் சில சர்வதேச சவால்கள் உள்ளன. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மார்ச் 3 வரை நடைபெற உள்ளது. மேலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க 150-வது ஆண்டு டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் மார்ச் 11 முதல் 15 வரை நடக்கவுள்ளது. இதனால் அந்த நாட்டு வீரர்கள் தொடக்கத்திலேயே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் எழலாம்.
ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 94 ஆக உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று தேவஜித் சய்கியா தெளிவுபடுத்தியுள்ளார். அனைத்து அணிகளும் தங்களுக்குள் தலா இரண்டு முறை மோதும் வகையில் போட்டிகளை அதிகரித்தால், அதற்கு இரண்டு மாதங்களுக்கும் மேல் தேவைப்படும்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பிற நாடுகளின் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை பாதிக்காத வகையில், தற்போதுள்ள இரண்டு மாத கால அவகாசமே போதுமானது என்றும், போட்டிகளை அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


