சினிமாவை விஞ்சும் அளவிற்கு சாலையில் சென்ற காரின் இரு புறமும் லாரிகளால் தடுத்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. மணல் குவாரி ஒப்பந்தம், லாரிகளில் மணல் அள்ளுவது என நீண்ட நாட்களாக நீடித்த பிச்சினைக்கு தீர்வு காண அமைதிப்ப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூன்று பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் சோன்ஹாட் பகுதியைச் சேர்ந்தவர் பரத் சிங். காங்கிரசிஸ் இருந்து பாஜகவில் இணைந்து உள்ளூர் அசியலில் செல்வாக்கு பெற்றவர் மணல் குவாரி ஒப்பந்தம் எடுத்துள்ளார். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான பரத் சிங், சோன்ஹாட் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பேசியும் வந்துள்ளார்.
இந்த சூழலில் மணல் அள்ளுவது தொடர்பாக பரத் சிங் மற்றும் மற்றொரு தரப்பினருக்கு இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் குவாரி விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர் தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையடுத்து, இரவில் தனது சகாக்களுடன் பரத் சிங், கொகுசு காரில் சென்றுள்ளார். நவுகைன் கிராமத்திற்கு அருகே சென்ற போது காருக்கு முன்பு சென்ற லாரி திடீரென சடன்பிரேக் போட்டு நிறுத்தப்பட்டுள்ளது. உடனே பரத் சிங் சென்ற காரும் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கணமே பின்னால் வந்த மற்றொரு லாரி கார் மீது மோதியுள்ளது.
இதனால், காரை வெளியே எடுக்க முடியாமல் பரத் சிங் திக்குமுக்காடியுள்ளார். அப்போது தான் திட்டமிட்டு கார் மீது லாரிகளை மோதச் செய்து ரவுண்டு கட்டப்பட்டதை உணர்ந்துள்ளார்.
உடனே பரத் சிங்கும் அவருடன் சென்ற நபர்களும் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்து ஓடி வந்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில், பரத் சிங் காருக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீக்காயம் ஏற்பட்ட எஞ்சிய மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில், வீரேந்திர சிங் மற்றும் நாகேந்திரா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மயங்க் சிங் என்பவர் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோன்ஹாட் போலீசார், அக்சத், விஷால், சத்ய பிரகாஷ், மன்னு திரிபாதி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து இந்த கொடூர செயலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? எதற்காக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட அவரின் சகாக்களை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மணல் குவாரி விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதத்ததால் பாஜக தலைவர் உட்பட 3 பேரை காருடன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் சத்தீஸ்கரில் கதிகலங்க வைத்துள்ளது.

