ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் நிலைநிறுத்தம் குறித்து ஒரு புதிய மறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ (NATO) தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தங்களின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டு இலக்குகளை முறையாக நிறைவேற்றாமல் இலவசப் பயணம் மேற்கொள்ளும் கூட்டணி நாடுகள், தங்களின் கடமைகளைச் சரிவர செய்யாவிட்டால் நேட்டோ அமைப்பிற்கு அமெரிக்கா வழங்க வேண்டிய நிதியின் ஒரு பகுதியை நிறுத்தி வைக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
ஆறு மாதங்கள்
சுமார் ஆறு மாதங்கள் வரை நீடிக்கவுள்ள இந்த இராணுவ மறு ஆய்வு, ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளின் குறைந்தபட்ச எண்ணிக்கையைச் சட்டப்பூர்வமாக்கியுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்துடனான ஆலோசனைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய அமெரிக்க-ஈரான் போரின் போது அமெரிக்காவிற்குத் தங்களின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்தவும் வான்வழியாகப் பறக்கவும் அனுமதி மறுத்த சில நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ஹெக்செத் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் வான்வழி மற்றும் இராணுவத் தள உரிமைகள் உறுதி செய்யப்படுவதை இந்த புதிய மறு ஆய்வு நிலைநிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிரடி நிலைப்பாடு
அத்தோடு நேட்டோ அமைப்பானது பனிப்போர் கால சிந்தனைகளிலிருந்து விடுபட்டு ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய நாடுகளே முதன்மைப் பொறுப்பேற்கும் வகையில் நேட்டோ 3.0 என்ற வலுவான இராணுவக் கூட்டணியாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நிலைப்பாட்டைத் தொடர்ந்து நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கருத்து தெரிவிக்கையில் கூட்டணி நாடுகள் கடந்த ஆண்டை விட 20 வீதம் கூடுதலாக 90 பில்லியன் டொலர்களைப் பாதுகாப்புக்காகச் செலவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் நேட்டோவின் அவசரகாலப் படைகளுக்கான அமெரிக்காவின் போர்விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கப்பல்களின் பங்களிப்புக் குறைப்பு ஏற்கனவே உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

