விஜய் அரசுக்கு நாளைக்கு தான் ரியல் டெஸ்ட்..!! புயலை கிளப்ப தயாராகும் திமுக, அதிமுக..!!
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. பின்னர் காங்கிரஸ் , இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால், தவெக ஆட்சி அமைக்க தேவையான 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது.
மே மாதம் 10ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். மே 11ஆம் தேதி சட்ட சபை கூடி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மே 13ஆம் தேதி சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இதனை அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் , பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது, மின்வெட்டு பிரச்சினை என பல்வேறு விவகாரங்கள் பூதாகரமாகியுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார். இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் ஆளுநரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்பார்.
அதன்பின்னர், கவர்னர் அர்லேகர் அவைக்கு வரும் அவர் 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வந்து தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குவார். அதன்பின்னர், கவர்னர் அர்லேகரின் உரையை, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். ஆளுநர் உரையில் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.
அதன்பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். அனேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இதனை அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் வில்சன் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கு நிதி உதவி திட்டம், தங்கம் சீர் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனல் அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 146 பேர் புதியவர்கள். முதல் முறையாக அவைக்கு வருபவர்கள். எனவே, சட்டசபை மரபுகள் என்ன, அவையில் எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது என்பதை எம்எல்ஏக்கள் தெரிந்துகொள்வதற்காக 2 நாள் புத்தாக்க பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.

