இலங்கை கடற்படையினர் கற்பிட்டி, கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை (15) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய இரண்டு படகுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘இலங்கை கடற்படை கப்பல் விஜய’ நிறுவனத்தினர், கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளை சோதனையிட்டதில், அவற்றிலிருந்த முப்பது (30) பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த பொதிகளை சோதனையிட்டதில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எட்டாயிரத்து நூறு (8,100) சவர்க்காரங்கள் மற்றும் எட்டாயிரத்து அறுநூற்று நாற்பது (8,640) ஷாம்பு பக்கெட்டுகள். கைப்பற்றப்பட்டன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் படகுகள் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எம்.எச்.எம்.சியாஜ்


