செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், சீனப் பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி முறையில் மிகப்பெரிய மறுசீரமைப்பைச் செய்து வருகின்றன. பழைய பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய தொழில்நுட்பப் பாடங்களை அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
சீனாவின் கல்வி அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சீனப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டு வந்த சுமார் 12,200 இளங்கலை பட்டப்படிப்புப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், சுமார் 10,200 புதிய பட்டப்படிப்புப் பிரிவுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், சீனாவின் ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகப் பாடங்களில் சுமார் 30% பாடங்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் கல்வி முறையில் இவ்வளவு குறுகிய காலத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம் இது.
ஏன் இந்த அதிரடி மாற்றம்?
சீனாவில் தற்போது இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 16%-க்கும் அதிகமாக உள்ளது. படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. இதைச் சரிசெய்ய, சந்தைக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொடுக்க சீனா முற்படுகிறது.
கலை, மனிதநேயம், வெளிநாட்டு மொழிகள், மற்றும் மேலாண்மை போன்ற பாடப்பிரிவுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. காரணம், இந்தப் பிரிவுகளில் தேவைக்கு அதிகமான பட்டதாரிகள் உள்ளனர், ஆனால் வேலைவாய்ப்புகள் இல்லை.

உதாரணத்திற்கு, ஷாங்காய் பல்கலைக்கழகம் தனது ‘Product Design’ படிப்பை நிறுத்திவிட்டது. காரணம், அந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மாடலிங், டிசைனிங் போன்ற அடிப்படை வேலைகளை தற்போது AI மென்பொருள்களே எளிதாகச் செய்துவிடுகின்றன.
நீக்கப்பட்ட படிப்புகளுக்குப் பதிலாக AI, டேட்டா சயின்ஸ், ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் நிதி, அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங் ஆகிய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் ஒன்பது பல்கலைக்கழகங்கள் ‘எம்போடீட் இன்டலிஜென்ஸ்’ (Embodied Intelligence) என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது, மென்பொருளாக இருக்கும் செயற்கை நுண்ணறிவை, ரோபோக்கள் போன்ற இயந்திரங்களுக்குள் செலுத்தி இயங்க வைக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் இது.

சீனாவின் இந்த நடவடிக்கை சரியா?
மாறிவரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப கல்விமுறையை மாற்றுவது காலத்தின் கட்டாயம். வேலைவாய்ப்பே இல்லாத பல பழைய படிப்புகளைப் படித்துவிட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிப்பதை விட, எதிர்காலத் தேவையை உணர்ந்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது நடைமுறைக்கு உகந்த துணிச்சலான முடிவாகும்.
பல கல்வியாளர்கள் இதை விமர்சிக்கவும் செய்கிறார்கள். “ஒரு படிப்பை நீக்கிவிட்டு உடனடியாக இன்னொரு புதிய படிப்பைக் கொண்டுவருவது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும்” என சீனாவின் தேசிய கல்வி அறிவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கலை, இலக்கியப் படிப்புகளை முற்றிலுமாகப் புறக்கணிப்பது, மாணவர்களின் பகுத்தறியும் திறனையும் சமூகப் பார்வையையும் மழுங்கடிக்கும் அபாயம் உள்ளது. வெறும் இயந்திரத்தனமான வேலைவாய்ப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்படக் கூடாது என்பது அவர்களின் வாதம்.

AI துறையில் சீனா…
உலகளாவிய AI பந்தயத்தில் அமெரிக்காவிற்கு இணையான ஒற்றைப் பெரும் போட்டியாளராக சீனா மட்டுமே உள்ளது. ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், சீனாவில் அரசாங்கம் ஒரு முடிவெடுத்தால் அதை நாடு முழுவதும் எந்தத் தடையுமின்றி உடனடியாக அமல்படுத்த முடியும். வெறும் 4 ஆண்டுகளில் 30% கல்விமுறையை மாற்றியதே இவர்களின் வேகத்திற்குச் சான்று.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் ‘உலகளாவிய தலைவனாக’ மாற வேண்டும் என்பதே சீனாவின் இலக்கு. AI-ஐ வெறும் மென்பொருளாகப் பார்க்காமல், விவசாயம், மருத்துவத் தயாரிப்பு, ரோபோட்டிக்ஸ் எனத் தங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தியிலும் இணைப்பதில் சீனா அதிவேகமாகச் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அதிக AI காப்புரிமைகளை பதிவு செய்வதிலும் சீனா முன்னிலையில் உள்ளது.

ஒரு காலத்தில் “ஒரு குறிப்பிட்டப் படிப்பைப் படித்தால், அதற்கான வேலை கிடைக்கும், வாழ்நாள் முழுவதும் அதில் செட்டிலாகிவிடலாம்” என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை இன்று உலகெங்கும் மாறிவிட்டது. இளங்கலைப் பட்டம் என்பது இறுதிக் கட்டம் அல்ல, அது ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே என்பதைச் சீனாவின் இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.
AI-ன் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்புச் சூழல் மிகப்பெரிய சவாலைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவின் கல்வித் துறையும் தொழில்நுட்ப உலகமும் சீனாவிடமிருந்து இந்த ‘வேகமான தகவமைப்பு’ முறையைக் கவனித்துப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

