EPFO: 8.25% PF வட்டி எப்போது அக்கவுண்டுக்கு வரும்? 8 கோடி உறுப்பினர்களின் ஒரே எதிர்பார்ப்பு!
2026-ஆம் நிதியாண்டிற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் EPFO அமைப்பின் கீழ் இருக்கும் 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் தங்களுடைய அக்கவுண்டில் வட்டி வரவு வைக்கப்பட்டுவிட்டதா? என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் கணக்கிற்கு வட்டி வரவில்லையே என்று உறுப்பினர்கள் குழம்புவதுண்டு.
2026-ஆம் நிதியாண்டின் பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று மத்திய அறங்காவலர் வாரியம், 8.25% வட்டி விகிதத்தை வழங்கும்படி பரிந்துரைத்தது. அதன்படி EPFO அமைப்பும் இதே விகிதத்தை அறிவித்தது. 2023-ஆம் நிதியாண்டிற்கு பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த விகிதம் மாற்றமின்றி இருந்து வருகிறது. அரசு ஓய்வூதிய சேமிப்பு திட்டங்களிலேயே அதிகபட்ச வட்டி தரும் திட்டம் என்றால் அது இந்த பிஎஃப் திட்டம் தான். PF திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு உறுப்பினரின் மாதாந்திர பேலன்ஸை பொறுத்து இருக்கும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும்.
உறுப்பினர்கள் எப்போது வட்டியை எதிர்பார்க்கலாம்?: 2026-ஆம் நிதியாண்டிற்கான வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என்ற தேதியை இதுவரையில் EPFO அமைப்பு அறிவிக்கவில்லை. இருந்தாலும் கடந்த கால நடைமுறைகளை வைத்து வட்டி எப்போது வரும் என்பதை யூகிக்கலாம்.

2025-ஆம் ஆண்டு நிதியமைச்சகம், மே மாததத்தில் வட்டி விகிதத்தை அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாத தொடக்கத்திற்குள் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு வட்டி வரவு வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டால் வரும் வாரங்களில் வட்டி வரவு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இது ஒரு வியூகம் மட்டுமே. துல்லியமான தேதி, அரசு எப்போது ஒப்புதல் அளிக்கிறதோ? அதை பொறுத்து அமையும்.
வட்டி விகித அறிவிப்புக்கும் அது கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கும் இடையே ஏன் கால இடைவெளி உள்ளது?: வட்டி விகிதம் அறிவிக்கப்பட்ட உடனேயே அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடாது. முதலில் மத்திய அறங்காவலர் வாரியம் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரைக்கும். பின்னர் அந்த முன்மொழிவு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அரசிடமிருந்து எப்போது ஒப்புதல் கிடைக்கிறதோ? அதன்பிறகே லட்சக்கணக்கான உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதால் EPFO அமைப்பு, ஒவ்வொரு உறுப்பினரின் அக்கவுண்டையும் பார்த்து அதன் பின்னரே வட்டியை வரவு வைக்கும். எனவே வட்டி வந்துவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள உறுப்பினர்கள், EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

