இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் கூடுதலாகும். அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டி மட்டும் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி திரைகள் வாயிலாக 40 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்து, ஐபிஎல் வரலாற்றிலேயே ‘மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டி’ என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இந்த 2026 ஐபிஎல் சீசன் முழுவதும் ஒட்டுமொத்தமாக 870 பில்லியன் (87,000 கோடி) நிமிடங்கள் மக்கள் திரைகளின் முன் அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு டிஜிட்டல் தளங்களில் வியூவர்ஷிப் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
வீடுகளில் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் இணையம் வழியே ஐபிஎல் பார்க்கும் ‘கனெக்டெட் டிவி’ கலாச்சாரம் இந்த சீசனில் 22 சதவீதம் அளவுக்கு அதிரடி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மொபைல் மற்றும் இதர டிஜிட்டல் திரைகளில் வீடியோக்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை (Digital Video Views) 25 பில்லியனை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் (Regional Languages) ஐபிஎல் போட்டிகளைக் பார்த்தவர்களின் வாட்ச்-டைம் (Watch-time) பங்கு டிஜிட்டல் தளங்களில் 33 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இது குறித்து ஜியோஸ்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) இஷான் சாட்டர்ஜி கூறுகையில், “இந்த சீசனின் இறுதித் தரவுகள், எங்களது அனைத்து தளங்களிலும் நாங்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
குறிப்பாக, குடும்பத்தோடு இணைந்து பார்க்கும் கனெக்டெட் டிவியின் கூட்டு அனுபவமும், மக்களின் சொந்தப் பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்ட வர்ணனைகளும் இந்த முன்னோடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான உந்துசக்தியாக அமைந்துள்ளன” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியின் தொடர் இரண்டாவது கோப்பை வெற்றி ஒருபுறம் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கும் வேளையில், இந்த வியூவர்ஷிப் சாதனை இந்திய கிரிக்கெட்டின் வர்த்தக எல்லையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

