2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாணவர்களுக்குத் தயாராவதற்கு மிகக் குறைவான காலமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதற்கு முந்தைய பரீட்சையின் முடிவுகள் மார்ச் 31 ஆம் திகதியே வெளியிடப்பட்டதால், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகத் பரீட்சை எழுதத் திட்டமிடும் மாணவர்களுக்குத் தயாராவதற்கு சுமார் 133 நாட்கள் மட்டுமே உள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு பாதிப்பு
கடந்த ஆண்டுகளில் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை முடிவுகளைப் பெற்ற பிறகு தயாராவதற்கு 178 முதல் 198 நாட்கள் வரை அவகாசம் பெற்றிருந்ததாகவும், தற்போதைய இந்த குறைக்கப்பட்ட தயாரிப்புக் காலம் நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் பரீட்சார்த்திகளுக்கு 27 முதல் 32 மாதங்கள் வரை படிப்பு நேரம் கிடைத்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சுமார் 21 மாதங்கள் மட்டுமே படிப்பு நேரம் கிடைக்கும் என்பதால், முதல் முறை பரீட்சை எழுதும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்கள், சமத்துவத்திற்கான அரசியலமைப்பு கோட்பாடு மீறப்பட்டதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களைத் தாக்கல் செய்யவோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் நிவாரணம் கோரவோ வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மறுபரிசீனைக்கு கோரிக்கை
2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சர்ச்சையை நினைவு கூர்ந்த கம்மன்பில, தயாரிப்பு நேரம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சை இறுதியாக ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பரீட்சை அட்டவணையை மறுபரிசீலனை செய்து மாணவர்களுக்கான நியாயத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தையும் கல்வி அமைச்சையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

