Last Updated:
தந்தையை மகனே நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொலை செய்தது 6 வருடங்களுக்கு பிறகு சிபிசிஐடி விசாரணையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
புதுச்சேரியில் 2வது திருமணம் செய்ய தயாரான தந்தையை மகனே நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொலை செய்தது 6 வருடங்களுக்கு பிறகு சிபிசிஐடி விசாரணையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஐய்யங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் 50 வயதான புருஷோத்தமன். சேதராபட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கடந்த 2020 டிசம்பர் 23ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். எந்தவித தடயமும் விட்டு வைக்காமல் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு புருஷோத்தமனைத் தீர்த்துக்கட்டி உள்ளனர். இதனால் கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் கடந்த 6 ஆண்டுகளாக காவல்துறைக்கு கடும் சவால்கள் நீடித்தது.
வழக்கில் எந்தவித துப்பும் சிக்கவில்லை எனக் கூறி விசாரணை தொய்வடைய இவ்வழக்கு சிபிசிஐடி ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான தனிப்படைக்கு மாற்றப்பட்டது. பழைய செல்போன் சிக்னல்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் மறைமுக சாட்சிகள் என சல்லடை போட்டு அலச ஆரம்பித்தனர். அதில் பேரதிர்ச்சியாக புருஷோத்தமனை, அவர் பெற்ற மகனான தனபிரவீன் என்பவரே கொடூரமாகக் கொன்று வீசியது அம்பலமானது. பெற்ற தந்தையை மகனே கொலை செய்தது ஏன்? அப்படியென்ன கொலைவெறி? என்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பெட்ரோல் பங்க் நடத்தி வந்த புருஷோத்தமன், கருத்து வேறுபாட்டால் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அப்போதுதான் ஆரோவில்லில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்யும் பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. மனைவி இல்லாத துக்கத்தை ஆர வைத்த அப்பெண்ணை 2வது திருமணம் செய்ய புருஷோத்தமன் முடிவு செய்துள்ளார். புருஷோத்தமனின் புது காதலுக்கும், அவரின் 2ஆவது திருமணத்திற்கும் மகன் தனபிரவீன் கடும் எதிர்ப்பு காட்டி உள்ளார். இவ்வளவு நாள் கவனித்துக் கொண்ட தனது தாய்க்கும், மகன் என்ற உரிமையில் தனக்கும் வந்து சேர வேண்டிய சொத்து தந்தையின் புது காதலிக்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் கொடூர முடிவெடுத்துள்ளார்.
அதற்காகத் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து பணம் தருவதாக டீல் பேசி பெற்ற தந்தைக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதன்படி பெட்ரோல் பங்க் வியாபாரத்தை முடித்து வீடு திரும்பிய புருஷோத்தமனை வழிமறித்த மகன் தனபிரவீன், நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். கொலை நடந்த சில நாட்களுக்கு முன் தனபிரவீன், தனது நண்பர்களிடம் “அப்பா 2வது கல்யாணம் பண்ணா நம்ம சொத்து எல்லாம் போயிடும். அவரை தீர்த்து கட்டணும்” என பேசிய ஆடியோ சிபிசிஐடியிடம் சிக்கியதே, வழக்கின் திருப்பத்திற்குக் காரணம்.
இதனையடுத்து தனபிரவீன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். 6 ஆண்டுகளாக நீடித்த கொலை வழக்கில் சிபிசிஐடியின் அதிரடி விசாரணை, வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2வது திருமணத்திற்கு தயாரான தந்தை.. மகன் போட்ட ஸ்கெட்ச்.. 6 ஆண்டுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்கள்!


