வரவிருக்கும் மாநிலத் தேர்தலை, மத்திய அரசாங்கம் ஜோகூர் அரசாங்கங்களுக்கு இடையேயான ஒரு போராகத் தோற்றமளிக்கச் செய்வதற்கு எதிராக, ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் நூர் அஸ்லீன் அம்ப்ரோஸ், டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலத் தேர்தல்கள் ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதி என்றும், பாரிசான் நேஷனலின் நோக்கம் மத்திய அரசைக் கவிழ்ப்பது அல்ல, மாறாக அதன் மாநில நிர்வாகத்தைப் பாதுகாப்பதே என்றும் நூர் அஸ்லீன் வலியுறுத்தினார்.
ஜோகூர் தேர்தல்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல் என்ற உணர்வுகளை லோக் பெரிதுபடுத்தக் கூடாது. இது ஒரு ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டியே தவிர, இரண்டு மட்ட அரசாங்கங்களுக்கு இடையேயான மோதல் அல்ல. புத்ராஜெயாவில் உள்ள சிலர் இந்த ஜனநாயகப் போட்டியை ஜோகூரைப் புறக்கணிப்பதற்கான ஒரு சாக்காகப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், அது அவர்களின் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் பிரதிபலிப்பாகும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்தப்படாமலோ அல்லது அழுத்தப்படாமலோ ஜோகூர் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தத் தகுதியானவர்கள் என்று நூர் அஸ்லீன் மேலும் கூறினார். ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடும் முடிவைத் தொடர்ந்து, லோக்கும் ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஸியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். மாநில அரசில் டிஏபி-யுடன் இணைந்து பணியாற்றுவதை விட, மந்திரி பெசார் பதவியை வகிக்காமல் இருப்பதே மேல் என்று ஜோகூர் அம்னோ தலைவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தனித்தனியாக, பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, கூட்டணியின் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலம் தேர்தல் பிரச்சாரங்கள், தாங்கள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள கொள்கைகளில் கவனம் செலுத்தும்; அது தனது போட்டியாளர்களைத் தாக்குவதற்கான ஒரு தளமாக இருக்காது. வாக்காளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துமாறு, அனைத்து மட்டங்களிலுமுள்ள பாரிசான் நேஷனலின் நிர்வாக அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் கூறினார்.
முடிந்தவரை, நாங்கள் யாரையும் தாக்க மாட்டோம். தாக்கப்பட்டால் மட்டுமே பதிலடி கொடுப்போம் என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் முறையே ஜூலை 11 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும்.




