Last Updated:
ஓமனில் இருந்து தனது கணவர் உடலை உடனடியாக மீட்டு வர வேண்டும் என நிஷாந்த்தின் மனைவி சராபின் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தார்.
போர் காரணமாக, ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கித் தவிக்கும் கப்பலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாலுமியின் உடலை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஓமன் நாட்டுக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக, ஓமன் நாட்டு கடல் பகுதியில் எம்டி செலிஸ்டியல் என்ற வணிக கப்பல் எங்கும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் தூத்துக்குடி மாவட்டம், குரூஸ்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் என்பவர் மாலுமியாக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 8ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து ஓமன் நாட்டின் துக்ம் (Duqm) துறைமுகக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தும் மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், 11-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
கப்பலில் உடலை பதப்படுத்தும் வசதி இல்லாத நிலையில் நிஷாந்தின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றிக் குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து முடிந்தவரை அழுகாமல் தடுக்க போராடி வருவதாக சக மாலுமிகள் வீடியோ வெளியிட்டனர்.
மேலும் தனது கணவரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நிஷாந்தின் மனைவி சராபின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 4 வயது மற்றும் 10 மாத குழந்தைகளை வைத்துக் கொண்டு நிற்கதியாக நிற்பதாக மனைவி சராபின் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிஷாந்த் உயிரிழந்த கப்பல் நிறுவனத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதோடு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதாக ஓமன் நாட்டுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


