உயிர்த்த ஞாயிறு தாக்குதலால், முதலாவதாகப் பயனடைந்தவர்கள் ராஜபக்சக்களும் பொதுஜன பெரமுனவினருமே என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியை மூடிமறைப்பதற்காக அரசாங்கமும் ராஜபக்ச தரப்பினரும் இணைந்து அரங்கேற்றும் ஒரு கூட்டு நாடகமாகவே சுரேஸ் சலே விவகாரத்தை தான் பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை (13) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி
மேலும் அந்த அறிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளமாகும். அரசியல் இலாபத்திற்காக நடத்தப்பட்டதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் தெரியவரும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால், முதலாவதாகப் பயனடைந்தவர்கள் ராஜபக்சக்களும் பொதுஜன பெரமுனவினருமாவர்.
அதன் பின்னரான சூழலில், இந்த விடயத்தை மையப்படுத்தி அதிகாரத்திற்கு வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர் ஆவர்.

இந்தத் தாக்குதலினால் நாம் மூன்று விதமான பெரும் சவால்களைச் சந்தித்தோம். முதலாவதாக, அரசியல் சதித் திட்டங்களால் அரங்கேற்றப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டன.
இரண்டாவதாக, முஸ்லிம் சமூகமாகிய நாம் பல்வேறு சவால்களுக்கும், அபாண்டமான பழி சுமத்தல்களுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. மூன்றாவதாக, இந்தத் தாக்குதலைக் கருவியாக்கி எமது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாம் தொடர் தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது.
இந்தத் தாக்குதலினால் எம்மீது பழி சுமத்தப்பட்டாலும், உண்மையான சூத்திரதாரிகள் யாரென்பதை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
சுரேஸ் சலே விவகாரம்
இன்று நாட்டின் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியிருக்கும் சூழலில், அதனை மூடி மறைப்பதற்காகவே இந்த அரசாங்கம் ‘சலே’ விவகாரத்தை ஒரு பிரதான கதாநாயகனாக்கி அரசியல் இலாபமடைந்து வருகிறது.
பொதுஜன பெரமுனவும் அவர்களது சகாக்களும் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, இந்த விவகாரத்தை வைத்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

உண்மையில் தற்போது நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக இரு தரப்பும் இணைந்து ஒரு நாடகத்தை நடத்துகின்றன. இதனால், நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்திற்குச் செல்லும் வரை இந்த இரு தரப்பும் இத்தகைய தொடர் நாடகங்களை அரங்கேற்றவே போகிறார்கள்.
இந்த விடயத்தை நாம் இரு வேறு நிலைப்பாடுகளிலிருந்தே அவதானிக்கிறோம்.
எமக்கு நாட்டின் பொருளாதார மீட்சியும் அவசியம், அதேபோல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியும் வேண்டும். இதுவே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
எனவே, அரசியல் நாடகங்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு, உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும், பொருளாதார மீட்சியை அடைவதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

