
IRNA, அமெரிக்கா – ஈரான் இடையிலான உத்தேச உடன்பாட்டின் 07 முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.
உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக் கூறி ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது Truth Social சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஊடகங்களில் வெளியாகியுள்ள நிபந்தனைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த விடயத்துடனும் அவற்றுக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் தரப்பினருடன் நேர்மையான முறையில் ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினம் எனக் குறிப்பிட்ட அவர், ஈரான் அதிகாரிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
ஈரான் அரசின் செய்தி நிறுவனமான IRNA, அமெரிக்கா – ஈரான் இடையிலான உத்தேச உடன்பாட்டின் 07 முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.
IRNA வெளியிட்ட தகவல்களின்படி, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக புதிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குப் பிறகே புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தற்போதைய ஒப்பந்தம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஈரானின் முடக்கப்பட்டுள்ள சொத்துகளில் ஒரு பகுதி விடுவிக்கப்படும் என்றும், மீதமுள்ள சொத்துகளை விடுவித்தல், பொருளாதார தடைகளை நீக்குதல் மற்றும் போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற விடயங்கள் பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எடுத்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது. வாரத்தின் தொடக்கத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்ட நிலையில், ராஜதந்திர ரீதியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது நாள் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து இரு தரப்பும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதால், இந்த உடன்பாட்டின் உண்மையான தன்மை குறித்து சர்வதேச மட்டத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

