1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கனரகத் தொழில்களைத் தொடங்க தனியார் நிறுவனங்களிடம் போதிய மூலதனம் இல்லை. இதனால், நேரு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய அணைகள் மற்றும் எஃகு ஆலைகளைத் தொடங்கி அரசே நேரடியாகத் தொழிற்சாலைகளை நடத்தியது. இது பிற்காலத்தில் ‘லைசென்ஸ்-பெர்மிட் ராஜ்ஜியமாக’ மாறியது.
2014-ல் மோடி பொறுப்பேற்றபோது இந்தியா ஏற்கனவே தாராளமயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டிருந்தது. எனவே, மோடியின் சவால் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவதல்ல; மாறாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உலகளவில் போட்டியிட வைப்பதாகும்.
இதற்காக அவர் தொழில்முனைவோரை நாட்டின் வளர்ச்சி கதையின் மையப்புள்ளியாக மாற்றினார்.
2016-ல் தொடங்கப்பட்ட ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ (Startup India) திட்டம், விதிமுறைகளை எளிதாக்கி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி வழங்கி நாட்டின் சிந்தனையை மாற்றியது. பாரம்பரியமாக அரசு வேலைகளையே விரும்பிய இந்திய இளைஞர்கள் மத்தியில், இன்று ஸ்டார்ட்அப் நிறுவனர்களைப் புதிய இந்தியாவின் அடையாளமாக அரசு கொண்டாடுகிறது.
மற்றொரு புறம், ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ மூலம் தெருவோர வியாபாரிகள், கைவினைஞர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பெருநிறுவனங்கள் மட்டுமல்லாமல், தையல்காரர், மெக்கானிக் போன்ற சிறு வணிகர்களும் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு பங்களிப்பவர்கள் என்ற அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைத்தது.
டிஜிட்டல் வணிகமும் தனியார் உற்பத்தியை ஊக்குவிப்பதும்:
நேருவின் காலத்தில் தொழிற்சாலைகளும் அணைகளும் வளர்ச்சியின் குறியீடாக இருந்தன. ஆனால், மோடியின் ஆட்சியில் கியூஆர்-கோடு (QR-Code) மற்றும் யுபிஐ (UPI) அடிப்படையிலான டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சாதாரண தேநீர்க் கடைகள் முதல் காய்கறி வியாபாரிகள் வரை ஸ்மார்ட்போன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி முறைசார்ந்த பொருளாதாரத்திற்குள் இணைந்துள்ளனர். மேலும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) போன்ற திட்டங்கள் மூலம் மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் அரசே நேரடியாகத் தொழிற்சாலைகளை நடத்தாமல், தனியார் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு வசதியாளராக (Facilitator) மட்டுமே அரசு செயல்படுகிறது.
நேருவின் காலத்தில் பொதுத்துறை, திட்டமிடுதல், சோசலிசம் மற்றும் அரசு உடைமை போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றன. ஆனால், மோடியின் ஆட்சியில் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்புகள், தொழில் செய்வதை எளிதாக்குதல் (Ease of doing business) மற்றும் “செல்வத்தை உருவாக்குபவர்கள்” (Wealth creators) போன்ற வார்த்தைகளே முன்னிறுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பங்களிக்கும் வணிகர்களை மதித்து அவர்களுக்குக் கௌரவம் அளிக்க வேண்டும் என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
நேருவின் இந்தியா ஒரு புதிய தேசத்தின் பொருளாதார அடித்தளத்தை அமைப்பதில் கவனம் செலுத்தியது என்றால், மோடியின் இந்தியா அந்தத் தேசத்தின் அடுத்தகட்ட எழுச்சியை நோக்கி தொழில்முனைவோரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில் கவனம் செலுத்துகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

