Last Updated:
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2029 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் வினாத்தாள் கசிவு, எரிபொருள் விலை உயர்வு போன்ற தேசிய பிரச்னைகளில் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை உருவாக்குவது உள்ளிட்ட யூகங்கள் குறித்தும் ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக,கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்போம் என தெளிவுப்படுத்தியுள்ளது.
அதேநேரம், இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சில கட்சிகள் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, கார்கேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விஷயங்களை தெளிவுபடுத்தாவிட்டால் இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
Jun 08, 2026 10:04 AM IST


