Last Updated:
அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு தான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது என ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
டிரம்பின் ஏஐ கொள்கை ஆலோசகர் பதவியில் இருந்து இம்மாத இறுதியில் விலக இருப்பதாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு தான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது எனக் கூறியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் பணியாற்றியது ஒரு கௌரவம் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், டிரம்ப் தலைமை இல்லாமல், செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் முன்னணியில் இருந்திருக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களில், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் எதிர்கொள்ளும் ஏஐ தொடர்பான முக்கியமான தருணத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், ஆற்றல், தரவு மையங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் பல இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்,அந்தச் சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ள உதவும் நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். தொழிலதிபர் எலான் மஸ்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர், கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் டிரம்பின் ஏஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஏஐ கொள்கைகளை வகுத்து வருகிறார்.
டிரம்பின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்… காரணம் என்ன?


