Last Updated:
“எல் நினோவின் தாக்கங்கள் இன்னும் கடுமையாக இருக்கும். அழிவுகரமான வேகத்தில் எல்லைகளைக் கடக்கும்” என்று எச்சரித்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர்.
பல தசாப்தங்களில் இல்லாத மிக சக்திவாய்ந்த சூப்பர் எல்-நினோ நிகழ்வு இந்த ஆண்டில் ஏற்படக் கூடும் என்றும் இதன் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனமும் ஐ.நா.-வும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எல்-நினோ என்பது என்ன?
பொதுவாக, புவி நடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில் சராசரிக்கும் அதிகமான வெப்பம் நிலவும். இதனால் உலகெங்கும் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு பாதிக்கப்படும். இதுவே ‘எல் நினோ’ எனப்படுகிறது. இந்த வருடம், இப்படியான எல்-நினோ ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் எல்-நினோ தாக்கம் தீவிரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் இது ‘சூப்பர் எல் நினோ’ எனப்படுகிறது. இந்த சூப்பர் எல்-நினோவால் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என்று அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
தற்போது பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் பல நூறு மீட்டர்கள் கீழே ‘கெல்வின் அலை’ என்கிற அதிவெப்ப நீரோட்டம் ஓடிக்கொண்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த அதிவெப்ப நீரோட்டத்தால் பசிபிக் கடல் பகுதி அசாதாரண வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது. இதன் காரணமாக நடப்பு மாதமான ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான காலத்தில் எல் நினோ தன்மை உருவாவதற்கு 80% வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கும் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவை மோசமாக பாதிக்கும். இதனால் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
சூப்பர் எல்-நினோவால் ஏற்படப்போகும் ஆபத்தை கீழ் இணைக்கப்படும் வீடியோவில் விரிவாக அறியலாம்:
இதுபற்றி பேசியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், “உலகம் இதை அவசரகால காலநிலை எச்சரிக்கையாகக் கருதி செயல்பட வேண்டும். எல் நினோவின் தாக்கங்கள் இன்னும் கடுமையாக இருக்கும், இன்னும் தொலைதூரம் பரவும், மற்றும் அழிவுகரமான வேகத்தில் எல்லைகளைக் கடக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
உலக வானிலையியல் அமைப்பு பொதுச் செயலாளர் செலஸ்டே சாலோ இதுபற்றி கூறுகையில், “’நாம் ஒரு வலிமையான எல் நினோ நிகழ்வுக்குத் தயாராக வேண்டும். இது வறட்சி மற்றும் பெருமழையை மேலும் தீவிரப்படுத்தும். நிலத்திலும் கடலிலும் வெப்ப அலை அபாயத்தை அதிகரிக்கும்” என்றுள்ளார்.
Jun 04, 2026 10:59 AM IST
150 ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் பெரும் ஆபத்து… கடும் வறட்சியில் சிக்கப்போகும் இந்தியா? எச்சரிக்கும் ஐ.நா.!


