ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன் குஜராத்தின் ஜாம்நகரில் வந்தாரா என்கிற பிரம்மாண்டமான விலங்குகள் மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இது அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமாகக் கருதப்படுகிறது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், உலகின் மிகப்பெரிய விலங்கு காப்பகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இதற்கிடையே, கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மையம், ராதாகிருஷ்ண கோயில் அறக்கட்டளை மற்றும் அதனுடன் தொடர்புடைய கோடியார் விலங்குகள் நல அறக்கட்டளை (Khodiyar Animal Welfare Trust) ஆகியவை சம்பந்தப்பட்ட விலங்குகள் இடமாற்றங்கள் குறித்து, நீதிமன்றத்தில் மார்ச் 9, 2026 தேதி உத்தரவைத் திரும்பப் பெறவும், சிபிஐ, அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட முகமைகள் மூலம் புதிய விசாரணைகளை நடத்த கோரிய மனுவையும், நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 2025 வரையிலான அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் (SIT) ஏற்கனவே முழுமையாக ஆராயப்பட்டுவிட்டதாகவும், அதில் கண்டுபிடிக்கப்பட்டவை செப்டம்பர் 15, 2025 அன்று உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மார்ச் 9, 2026 அன்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட SIT அறிக்கையின் அடிப்படையில், அதில் ஆராயப்பட்ட பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக, எதிர்வாதிகள் எண் 5 மற்றும் 6 ஆகியோரை விசாரிக்கவோ அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடரவோ முடியாது” என்று கூறிய நீதிபதி அமர்வு, இதை ஒரு “இறுதித் தடை” (bar of finality) என்று விவரித்தது.
மேலும், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள இடைத்தரகர்களால் முறைகேடுகள் செய்யப்பட்டாலும், இந்திய அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் CITES ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களால் இறக்குமதிகள் ஆதரிக்கப்பட்டால், இந்தியப் பெறுநர் நிறுவனத்தின் மீது தானாகவே பொறுப்பைச் சுமத்த முடியாது என்று தீர்ப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது.
அதேபோல், குற்றவியல் விசாரணைகளை மீண்டும் தொடங்குவதற்கான காரணங்களாக ஊடக அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள், கசிந்த உரையாடல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களைச் சார்ந்திருப்பதையும் நீதிபதி அமர்வு நிராகரித்தது; ஏனெனில் அத்தகைய டிஜிட்டல் பொருட்களில் உறுதிப்படுத்தும் பிசிகல் எவிடென்ஸ் (physical evidence) இல்லை என்று குறிப்பிடப்பட்டது.
முக்கியமாக, வந்தாராவுடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்குச் சாதகமாக ஒரு “நிலைபெற்ற மற்றும் உறுதியான உரிமை” உருவாகியுள்ளது என்றும், இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அவற்றின் அறங்காவலர்கள், இயக்குநர்கள், நிர்வாகம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிறுவனங்களுக்கு மேலும் கட்டாய நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது என்றும் நீதிமன்றம் கூறியது. ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட செயலகத்துடன் கலந்தாலோசித்து, மூன்று மாதங்களுக்குள் கடுமையான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்குமாறு இந்தியாவின் CITES மேலாண்மை ஆணையத்திற்கு அது உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பதிலளித்த வந்தாரா தலைமை நிர்வாக அதிகாரி விவான் கரணி, ஜாம்நகர் மையத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு விலங்கும் சட்டப்பூர்வமான செயல்முறைகள் மூலமாகவே வந்தடைந்தது என்றும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நலவாழ்வுத் தரங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தங்கள் அமைப்பின் நீண்டகால நிலைப்பாட்டை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
வந்தாராவின் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமல்ல, இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள பரந்த தத்துவத்திற்கான ஒரு ஏற்பும் கூட என்று கரணி கூறினார். “முதல் மீட்புப் பணியிலிருந்தே, எங்கள் அர்ப்பணிப்பு எளிமையானது, எங்கள் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு விலங்கும் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் ஆதரவுக்குத் தகுதியானது. எங்கள் செயல்முறைகளின் நேர்மையையும், எங்கள் பாதுகாப்புப் பணியின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.
வந்தாராவின் பணி விலங்கு மீட்புக்கு அப்பாற்பட்டது என்றும், சர்வதேச அமைப்புகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நீண்டகாலப் பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் இன மீட்பு முயற்சிகளையும் உள்ளடக்கியது என்றும் அவர் மேலும் கூறினார். “வந்தாராவில், பாதுகாப்பு என்பது ஒரு முழக்கம் அல்ல, அது ஒரு அன்றாடப் பொறுப்பு. ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது, மேலும் இந்தத் தீர்ப்பு, விலங்கு நலன், அறிவியல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் எங்கள் பணியைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கான எங்கள் உறுதியை வலுப்படுத்துகிறது” என்று கரணி கூறினார்.

