Last Updated:
வேகப்பந்து மற்றும் ஸ்லோயர் பந்துகள் என எதற்கும் அஞ்சாமல் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார்.
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2012ஆம் ஆண்டு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் 59 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக சூர்யவன்ஷி 53 சிக்சர்களை அடித்திருந்தார். இந்நிலையில் இன்று மேலும் 12 சிக்சர்கள் அடித்து 65 சிக்சர்களுடன், ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராகக் களம் இறங்கிய சூர்யவன்ஷி, ஆரம்பம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். போட்டியின் 4-வது ஓவரை ஹைதராபாத் அணியின் சாகிப் உசேன் வீசினார். அந்த ஓவரின் தொடக்கத்தில் கிறிஸ் கெய்லின் 59 சிக்ஸர்கள் சாதனையைச் சமன் செய்த சூர்யவன்ஷி, அடுத்த மூன்று பந்துகளுக்குள் சாதனையை முறியடித்து புதிய சிகரத்தை எட்டினார்.
சாகிப் உசேன் வீசிய ஸ்லோயர் மற்றும் ஷார்ட் பந்துகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட அவர், அடுத்தடுத்து லாங்-ஆஃப் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 61 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த அதிரடியின் மூலம் வெறும் 16 பந்துகளிலேயே சூர்யவன்ஷி தனது அதிவேக அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார்.
கம்மின்ஸின் வியூகங்களையும், ஃபீல்டிங் மாற்றங்களையும் மிக சாதுரியமாக முறியடித்த சூர்யவன்ஷி, வேகப்பந்து மற்றும் ஸ்லோயர் பந்துகள் என எதற்கும் அஞ்சாமல் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார். இவரின் அசுரத்தனமான பேட்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்து இமாலய தொடக்கத்தைப் பெற்றது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி குறைந்த பந்துகளில் சதம் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யவன்ஷி பிரபுல் ஹிங்கே வீசிய பந்தில் ஸ்மாரன் ரவிச்சந்திரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


