Last Updated:
ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தால் தங்களது விருப்பமான அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
ராஜஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 38 ரன்களும், இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 15 பந்துகளில் 32 ரன்களும், தாசுன் ஷனகா 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மும்பை அணியின் பந்துவீச்சில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து நமன் தீர் (6 ரன்கள்), திலக் வர்மா (3 ரன்கள்) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து அணியை மீட்கப் போராடினார்.
அவருக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாடிய வில் ஜாக்ஸ் 33 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி பிரிந்த பிறகு மும்பை அணியின் பேட்டிங் வரிசை மீண்டும் சரிவைச் சந்தித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகத் துல்லியமாகப் பந்துவீசி மும்பை அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். அவர் தனது 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பையின் வெற்றி வாய்ப்பைத் தகர்த்தார்.
அவருக்குப் பக்கபலமாக நந்த்ரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.


