டிரம்ப் – நெதன்யாகு குற்றம்சாட்டிக்கொள்ள காரணம் என்ன?
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கத்தார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் உருவாக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் விரும்புகிறார். மேலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் சில நாட்கள் அவகாசம் கொடுக்கலாம் என்பது டிரம்பின் எண்ணமாக உள்ளது.
இருப்பினும் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளை முழுமையாக அழித்து, அந்நாட்டு அரசை பலவீனப்படுத்த மீண்டும் கடுமையான ராணுவத் தாக்குதல்களைத் தொடங்க வேண்டும் என்பதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக இருக்கிறார். டிரம்பின் இந்த அமைதி பேச்சுவார்த்தை அணுகுமுறையை நெதன்யாகு கடுமையாக எதிர்த்துள்ளார். தாக்குதல்களை தாமதப்படுத்துவது ஈரானுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்று நெதன்யாகு டிரம்பிடம் தெரிவித்துள்ளார். டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு நெதன்யாகு கடுமையான அதிர்ச்சியும் கோபமும் அடைந்ததாக அமெரிக்க ஊடகமான ஆக்ஸியோஸ் (Axios) தெரிவித்துள்ளது.

தொடரும் மோதல்!
உரையாடலுக்குப் பிறகு நெதன்யாகு தலையில் நெருப்புப் பிடித்தது போல் மிகுந்த கோபத்தில் இருந்தார் என அமெரிக்க அதிபாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது Bibi’s hair was on fire என்று அந்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். உரையாடலின்போது மத்திய கிழக்கு போரை நிறுத்த ஈரான் அளித்துள்ள புதிய 14 அம்ச திட்டத்தை ஆராய்ந்து வருவதாக நெதன்யாகுவிடம் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில், டிரம்ப்-ம் நெதன்யாகுவும் 3 முக்கிய கட்டங்களில் வெளிப்படையாக மோதிக்கொண்டனர். இருவரும் தங்களுக்குள் “தினமும் பேசிக்கொள்வதாகவும், முழுமையான ஒருங்கிணைப்பு இருப்பதாகவும்” வெளியில் காட்டிக் கொண்டாலும், போரின் நகர்வுகளில் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளன.
நெதன்யாகு சில நேரங்களில் தன்னிச்சையாகச் செயல்படுவதாக டிரம்ப் பகிரங்கமாகவே கண்டித்திருந்தார். இதுவே இப்போரில் அவர்களுக்குள் வெடித்த முதல் பெரிய அதிருப்தி. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஈரானுடன் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டபோது, லெபனான் எல்லைப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நெதன்யாகுவின் வற்புறுத்தலை ஏற்று லெபனான் போர் நிறுத்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று டிரம்ப் கூறினார். ஆனால், போர்நிறுத்தம் முறியும் அபாயம் ஏற்பட்டவுடன், டிரம்ப் திடீரென தனது முடிவை மாற்றி, லெபனான் எல்லையிலும் தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை நிர்பந்திக்கத் தொடங்கினார். இது நெதன்யாகுவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ஈரானுக்கு எதிராக “ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹாமர்” (Operation Sledgehammer) என்ற பெயரில் புதிய கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்க டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் கோரிக்கையை ஏற்று டிரம்ப் திடீரென தாக்குதலை தள்ளிப்போடுவதாக அறிவித்தார். இது நெதன்யாகுவிற்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மிகக் கடுமையான மோதல் இதுதான்.
Operation Epic Fury Vs Operation Sledgehammer
இதேபோல பிப்ரவரி 28- ஆம் தேதி, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கிய போரின் முதல் கட்டத்திற்கு “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, மீண்டும் பெரிய அளவிலான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்க அமெரிக்கா ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹாமர்” (Operation Sledgehammer) என்ற புதிய பெயரைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவின் 1973-ஆம் ஆண்டின் War Powers Resolution, திட்டத்தின் படி, அதிபர் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ராணுவத்தை போரில் ஈடுபடுத்தினால், 48 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், 60 நாட்களுக்குள் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறாவிட்டால் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். அமெரிக்க அரசு ஏப்ரல் மாத போர்நிறுத்தத்தின் போது “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” முடிவுக்கு வந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
மீண்டும் தாக்குதலைத் தொடங்கும்போது, அதே பழைய பெயரைப் பயன்படுத்தினால் 60 நாள் காலக்கெடு முடிந்துவிட்டதாக நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போடும். எனவே, “ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹாமர்” என்ற புதிய பெயரில் போரைத் தொடங்கினால், அது ஒரு ‘புதிய போர்’ என்று வாதிட்டு, மீண்டும் 60 நாட்களுக்கு நாடாளுமன்ற அனுமதி இல்லாமலேயே தாக்குதலைத் தொடரலாம் என்பதே டிரம்பின் Strategy- ஆக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் “ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹாமர்” திட்டத்தின்படி ஈரானின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

ஆனால், வளைகுடா நாடுகள், போரை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று டிரம்பிற்கு அழுத்தம் கொடுத்தன. இதனால், செவ்வாய்க்கிழமை அன்று நடத்தவிருந்த தாக்குதல்களை, நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தாமலேயே திடீரென நிறுத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே Permanent Geopolitical Split ஏற்பட்டால், அது உலகளாவிய அரசியலிலும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல புதிய மாற்றங்களையும், சில சாதகமான நன்மைகளையும் உருவாக்கக்கூடும்.
குறைகிறதா இஸ்ரேலின் பலம்?
மத்திய கிழக்கில் இஸ்ரேல் எடுக்கும் பல அதிரடியான ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆயுத ஆதரவும், ஐநா சபையின் Veto அதிகாரப் பாதுகாப்பும் மிக முக்கிய பலமாக இருந்து வருகிறது. அமெரிக்கா தனது ஆதரவை நிரந்தரமாக விலக்கிக்கொண்டால், இஸ்ரேல் தன்னிச்சையாகப் பிற நாடுகள் மீது போர் தொடுப்பது அல்லது வான்வழித் தாக்குதல் நடத்துவது குறையும்.
இது அந்த பிராந்தியத்தில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும். இதுவரை அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலை ஆதரித்து வந்ததால், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான ஐநா தீர்மானங்கள் பலமுறை முடக்கப்பட்டன. அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் ஏற்படும் விரிசல், Fairer Palestinian Peace Process-க்கு வழிவகுக்கும். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பல சர்வதேச சட்டங்களை நிறைவேற்ற முடியும். பாலஸ்தீன எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது போன்ற விவகாரங்களில் உலக நாடுகள் ஒன்றிணைந்து நியாயமான முடிவை எடுக்க வாய்ப்பு ஏற்படும்.
அமெரிக்கா ஆண்டுதோறும் இருந்து சுமார் 4 பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு ராணுவ நிதியாக வழங்கி வருகிறது. இருநாடுகளுக்கும் விரிசல் ஏற்படும் பட்சத்தில், இந்த மிகப்பெரிய நிதிச் சுமை அமெரிக்காவுக்குக் குறையும். அந்த நிதியை அமெரிக்கா தனது உள்நாட்டுக் கட்டமைப்புக்கோ அல்லது உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் போன்ற பிற முக்கிய பிராந்திய பாதுகாப்பிற்கோ பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்ரேல் என்பது வெறும் ஒரு நட்பு நாடு மட்டுமல்ல; அது அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கம், உள்நாட்டு அரசியல் லாபம், உளவுத்துறைத் தேவை மற்றும் பில்லியன் டாலர் ஆயுத வர்த்தகம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் ஒரு Superpower Strategy. இதனால்தான் அதிபர்கள் மாறினாலும், இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் கொள்கை மாறுவதில்லை. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிறு விரிசல், பெரிதாகி America First என்ற கொள்கையை டிரம்ப் இறுக்கி பிடித்தால், மத்திய கிழக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நிம்மதிதான்.

