வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி காவல்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (21-05-2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது, பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியினைத் தையிட்டி விகாராதிபதி அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில் அதனை விடுவிக்க முயற்சித்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராகப் பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கு விசாரணைக்குத் தெல்லிப்பழை காவல் நிலைய பொறுப்பதிகாரி கூடச் சம்பந்தமே இல்லாது நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இவ்வாறான விடயங்கள் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரதேச சபைக்குக் காவல்துறையினர் விடுக்கும் அச்சுறுத்தலாகவே இதனை நாம் கருத வேண்டும்.
தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என அறிவித்தல் பலகையை நாட்டுவதற்குப் பிரதேச சபையில் நாம் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் அதற்கும் பலாலி காவல்துறையினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுத் தடையேற்படுத்தி இருந்தனர்.
சட்ட நடவடிக்கை
தற்போது வீதியினை விடுவிக்கும் முயற்சிக்கும் தடையேற்படுத்தி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாது தடையேற்படுத்தி வருவதுடன் நீதிமன்றில் வழக்குகளும் தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான பலாலி காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சபையில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்த நிலையில், சபையில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, தீர்மானங்களை மாத்திரம் எடுத்துவிட்டு காலம் கடத்தாது உடனடியாகச் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து நீதிமன்றில் காவல்துறையினருக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து விரைவான நடவடிக்கையைத் தவிசாளர் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறான விடயங்களுக்குத் தமிழ் சட்டத்தரணிகள் பேதங்கள் இன்றி ஓரணியில் திரண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் சபையில் உறுப்பினர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

