( ரெ.மாலினி)
மலாக்கா:
பணம் இல்லாத காரணத்தால், குவலா சுங்கை பாருவில் கடந்த வியாழக்கிழமை ஒரு பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடந்த மே 14 ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், 41 வயதுடைய பெண் ஓட்டுநரின் தலை, உடல், கால்கள் மற்றும் கைகளில் காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டன. மேலும், நான்கு சந்தேக நபர்களில் மூன்று பேர் அவரது கழுத்தில் கயிற்றினால் தடயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரின்டெண்டன் அஹ்மட் அபு பக்கார் கூறுகையில், புக்கிட் ரம்பாய் பகுதியில் இருந்து ஒரு பள்ளி மாணவி உட்பட நான்கு பயணிகளை ஓட்டுநர் அழைத்துச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
14 வயதுடைய இரண்டு சிறுமிகள், 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரும் குவால சுங்கை பாருவிற்கு செல்ல விரும்பி, கிராப் ஆப் மூலம் பயண முன்பதிவு செய்தனர். குவால சுங்கை பாருவில் உள்ள காட்டுப் பகுதிக்கு அருகில் வந்ததும் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.




