Last Updated:
வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே ஜல்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிருத்திக். இவருக்கு பாதல்பூரை பகுதியைச் சேர்ந்த 24 வயதான தீபிகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
கடந்த 14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தின் போது பெண் சார்பாக, மாப்பிள்ளை வீட்டார் கேட்ட அத்தனையும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்களை வாங்கிய போதும் அவர்களின் பேராசை குறைந்தபாடில்லை.
இதனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் ஹிருத்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து நச்சரித்ததுடன் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே சக்திக்கு மேலாக வரதட்சணை கொடுத்ததால் மேற்கொண்டு பெற்றோரை தொந்தரவு செய்ய தீபிகாவுக்கு மனம் வரவில்லை. எனவே கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லாமல் மூடி மறைத்துள்ளார். இதனால் கணவரும், அவரது குடும்பத்தினரும் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் இரவில் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளம்பெண் தீபிகாவின் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடித்து துன்புறுத்தியதற்கான காயங்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார்.
அதில், வரதட்சணை கொடுமைப்படுத்தி தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபிகாவின் கணவர் ஹிருத்திக், மாமனார் மனோஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கடந்த 12 ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வரதட்சணைக் கொடுமையால் 33 வயதான இளம்பெண் திவிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீள்வதற்குள் நொய்டாவில் 24 வயதான பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
May 18, 2026 10:17 PM IST


