Last Updated:
இந்தியாவுக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறேன். அது மரியாதையான மற்றும் தேவையற்ற விமர்சனங்கள் இல்லாத சூழலில் அமைய வேண்டும்.
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி அதிரடியான பதிலை அளித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வெளியிட்டுள்ள சமீபத்திய போட்காஸ்டில் பேசிய கோலி, தான் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு ஒரே ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள 37 வயதான கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் (ODI) மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தான் அணியின் சூழலுக்கு வலுசேர்ப்பதாக நிர்வாகம் கருதினால் மட்டுமே விளையாட விரும்புவதாக கோலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், “நான் எனது தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க விரும்பவில்லை. எனது உழைப்பிலும் தயாரிப்பிலும் நான் நேர்மையாக இருக்கிறேன். நான் விளையாட வரும்போது, மற்ற யாரையும் விட கடினமாக உழைக்கிறேன். என்னிடம் 40 ஓவர்கள் எல்லைக்கோட்டில் ஓடி பீல்டிங் செய்யச் சொன்னால் கூட புகாரின்றி செய்வேன்,” என்று அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதங்கள் விளாசியது மற்றும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியது குறித்துப் பேசிய அவர், தற்போது யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், விளையாட்டின் மீதான காதலால் மட்டுமே விளையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்துப் பேசிய கோலி, “உங்கள் திறமையை நம்புவதாகக் கூறிவிட்டு, ஒரு வாரம் கழித்து நீங்கள் செயல்படும் விதத்தைக் கேள்வி எழுப்பினால், அந்த இடம் எனக்குத் தேவையில்லை. நான் எப்போதும் விளையாடத் தயாராகவே இருக்கிறேன். ஏனெனில் எனது அன்றாட வாழ்க்கையே கிரிக்கெட்டுக்கான தயாரிப்புதான்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாகவும், ஆனால் அது மரியாதையான மற்றும் தேவையற்ற விமர்சனங்கள் இல்லாத சூழலில் அமைய வேண்டும் என்பதையும் கோலி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அதிரடியான பதில்கள் கோலியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


